பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியாவுக்கு மத்திய அரசு விரைவில் தடை? என்.ஐ.ஏ. ரெய்டு எதிரொலி!
டெல்லி: தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கடும் சோதனைகளுக்குள்ளாக்கப்பட்டு 106 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய பாஜக அரசு விரைவில் தடை விதிக்கக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் உள்ளிட்டோரின் 150க்கும் மேற்பட்ட வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தினர். 15 மாநிலங்களில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

106 பேர் கைது- கேரளாவில் பந்த்
இச்சோதனைகளின் முடிவில் அந்த இயக்கத்தின் தலைவர் உட்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி பார்வையில் இந்த சோதனைகள், கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 6 பிரதான கண்ட்ரோல் ரூம்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழகத்திலும் பல மாவட்டங்களில், குக்கிராமங்களில் கூட இந்த சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனைக்கு எதிராக பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் போராட்டங்களை நடத்தினர். இன்று கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பயங்கரவாதத்துக்கு உதவி?
இந்தியாவில் பயங்கரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிதி உதவி செய்தது; பயங்கரவாத இயக்கத்தை உருவாக்க முயற்சித்தது என்பதும் மத்திய பாஜக அரசின் குற்றச்சாட்டு. பயங்கரவாதத்துக்கு என ஒதுக்கப்பட்டதாக சொல்லப்படும் ரூ60 கோடி நிதி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது என்கிறது மத்திய அரசு வட்டாரங்கள். நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ரூ68 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர் சோதனை
தமிழகத்திலும் இதர மாநிலங்களிலும் ஏற்கனவே பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனை வழக்கமான ஒன்றாகப் பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அத்துடன் நேற்று இரவு இச்சோதனைகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தியதும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது

விரைவில் தடை?
தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பயங்கரவாத பயிற்சி முகாம்களை இந்த அமைப்பு நடத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய பாஜக அரசு தடை விதிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அல் உம்மா அமைப்பு தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications