மோடி பயணம் தொடர்பான உளவுத்துறை தகவல்களை பஞ்சாப் போலீசார் பின்பற்றவில்லை- உள்துறை அமைச்சகம் கண்டனம்
டெல்லி: பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான உளவுத்துறை தகவல்களை பஞ்சாப் போலீசார் பின்பற்றவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
Recommended Video
பஞ்சாப் மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ரூ42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு சென்றார்.
பஞ்சாப் சம்பவம்.. பிரதமரை கொல்லும் முயற்சி?? பாகிஸ்தானின் சதித்திட்டம்.. பாஜக வெளியிட்ட பரபர வீடியோ
மோடி பயணம் ரத்து
பஞ்சாப் மாநிலத்தின் ஃபெராஸ்பூரில் நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதலில் ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக சாலை மார்க்கமாக பிரதமர் மோடி சென்றார். பிரதமர் மோடி செல்லும் வழியில் பதிண்டா மேம்பாலத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார். இதனால் அப்பாலத்திலேயே பிரதமர் மோடியின் வாகனம் சுமார் 20 நிமிடங்கள் காத்திருந்தது. பின்னர் பஞ்சாப் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு பிரதமர் மோடி டெல்லி திரும்பினார்.
பிரதமர் மோடி கருத்து
டெல்லி திரும்பும் முன்பாக, நான் உயிரோடு திரும்ப அனுமதித்த உங்கள் முதல்வருக்கு நன்றி என அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறியதாக தகவல்கள் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பஞ்சாப் மாநில அரசு கவனக்குறைவாக இருந்ததாக மத்திய அரசு குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இதனை திட்டவட்டமாக மறுத்திருந்தார்.
விளக்கம் கேட்ட உள்துறை அமைச்சகம்
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் மாநில அரசிடம் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்து விளக்கம் கேட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடியின் பயணத்தின் போது விவசாயிகள் போராட்டம் நடத்தக் கூடும் என்கிற உளவுத்துறை தகவல்களை பஞ்சாப் அரசு கவனத்தில் கொள்ளவில்லை எனவும் உள்துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர், பிரதமர் மோடியின் பயணம் தொடர்பான ப்ளூ புக் விதிகளை பஞ்சாப் அரசு பின்பற்றவில்லை. பிரதமர் மோடி பயணத்தின் போது அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் மாற்றுவழியில் அவர் பயணம் செய்ய உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியிருந்தது. அதனை பஞ்சாப் மாநில அரசு பின்பற்றவில்லை என கூறியுள்ளார்.
பஞ்சாப் போலீஸ் மீது புகார்
பொதுவாக பிரதமர் மோடியின் பாதுகாப்பில் சிறப்பு பாதுகாப்பு படை வீரர்களுக்கு அடுத்ததாக பஞ்சாப் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க வேண்டும். பஞ்சாப் போலீசார்தான் மாற்று ஏற்பாடுகள் குறித்து சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் தர வேண்டும். ஆனால் பஞ்சாப் மாநில போலீசார் இது தொடர்பான நடைமுறைகளை முறையாக பின்பற்றவில்லை என்றும் அந்த உள்துறை அமைச்சக அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார்.