அன்லாக் 3.0: சுதந்திர தினத்தை எப்படி கொண்டாடுவது - அரசு வழிகாட்டுதல்கள் என்னென்ன
கொரோனா அச்சம் இருப்பதால் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். சுதந்திர நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் உரிய சமூக இடைவெளி, முகக்கவசங்கள், கை சுகாதாரம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்
டெல்லி: நாடு முழுவதும் தேசிய அளவில், மாநில, மாவட்ட, துணை மண்டல, நகராட்சி, பஞ்சாயத்துகள் உள்ளிட்ட இடங்களில் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம் எனவும் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. சுதந்திர நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் உரிய சமூக இடைவெளி, சரீர இடைவெளியோடும் முகக்கவசங்கள், கை சுகாதாரம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பில் சிக்கித் தவித்து வரும் சூழலில் கொண்டாட்டங்கள், விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவு கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் அன்லாக் 3.0 தொடர்பான விரிவான வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் சுதந்திர தினம் கொண்டாட்டம் குறித்த வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய அளவில், மாநில, மாவட்ட, துணை மண்டல, நகராட்சி, பஞ்சாயத்துகள் உள்ளிட்ட இடங்களில் சுதந்திர தினத்தைக் கொண்டாடலாம்.
டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் ஆயுதப்படை மற்றும் டெல்லி போலீசாரின் மரியாதையை பிரதமர் மோடி ஏற்பார். பின்னர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். அப்போது 21 முறை துப்பாக்கிக் குண்டுகள் முழங்க வீர வணக்கம் செலுத்தப்படும். இதையடுத்து நாட்டு மக்களுக்கு பிரதமர் உரையாற்றுவார். பின்னர் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டு தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவுக்கு வரும்.
வழக்கம் போல் மாநில முதல்வர்கள் தலைநகரங்களில் கொடியேற்றலாம். துணை ராணுவப் படை, என்.சி.சி, ஸ்கவுட், போலீசார் உள்ளிட்டோர் மரியாதையை முதலமைச்சர்கள் ஏற்பர். பின்னர் மாநில மக்களுக்கு உரையாற்றுவர். போதிய சமூக இடைவெளியுடன் முகக்கவசங்கள் அணிந்து அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி முடிவுக்கு வரும்.
அன்லாக் 3.0.. பள்ளிகள், தியேட்டர்கள் இயங்காது.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆகஸ்ட் 31 வரை லாக்டவுன்!
கொரோனா அச்சம் இருப்பதால் மக்கள் அதிகளவில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். சுதந்திர நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் உரிய சமூக இடைவெளி, முகக்கவசங்கள், கை சுகாதாரம் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
கொரோனாவிற்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டோரை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கலாம். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு அழைப்பு விடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.