அமெரிக்காவில் கொரோனா கோரத்தாண்டவம்-ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,01,098; இந்தோனேசியாவில் 1,759 பேர் பலி
டெல்லி: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் கோரத்தாண்டவமாடி வருகிறது. அமெரிக்காவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,01,098 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பிரேசிலில் 886 பேரும் ரஷ்யாவில் 794 பேரும் நேற்று கொரோனாவால் உயிரிழந்தனர்.
உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது அமெரிக்காவில்தான் உலகிலேயே மிக அதிக அளவிலான கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.
உலக நாடுகளின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 19,85,01,621 ஆக அதிகரித்திருக்கிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,92,57,320. உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42,32,290.
அமெரிக்காவில் மீண்டும் உச்சம்
அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,01,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 35,693,126. அமெரிக்காவில் நேற்று 429 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 6,29,074.
2-வது இடத்தில் இந்தியா
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு 41,499 ஆக இருந்தது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 598 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 25,284 பேர் நேற்று குணமடைந்தனர். இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 31,612,794 ஆகவும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 4,23,842 ஆகவும் இருக்கிறது.
இந்தோனேசியாவில் பலி அதிகம்
இந்தியாவை தொடர்ந்து இந்தோனேசியாவில் நேற்று ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 41,168 ஆக இருந்தது. இந்தோனேசியாவில் நேற்று மட்டும் 1,759 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 92,311. இந்தோனேசியாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33,72,374. பிரேசிலில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,904 ஆகவும் உயிரிழப்புகள் எண்ணிக்கை 886 ஆகவும் இருக்கிறது. ரஷ்யாவில் 23,564 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ரஷ்யாவில் நேற்று மட்டும் 794 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
கேரளாவில் அதிகம்
இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளன. கேரளாவில் நேற்று ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 20,624 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 80 ஆகவும் இருந்தது. மகாராஷ்டிராவில் 6,959 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேநேரத்தில் 225 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
பாதிப்பு அதிக மாநிலங்கள்
ஆந்திராவில் 2,058 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் 1987 பேருக்கும் தமிழகத்தில் 1986 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. இந்தியாவில் இதுவரை மொத்தம் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 46.15 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. அத்துடன் 48.78 கோடிக்கும் அதிகமான (48,78,63,410) கொரோனா தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 68,57,590 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன. சுமார் 3.14 கோடி (3,14,57,081) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
Recommended Video
10 மாநிலங்களில்..
இதனிடையே தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டம் மத்திய சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன. தேசிய அளவிலான செரோ பரவல் ஆய்வு, பன்முகத்தன்மை கொண்டதாக இருப்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து அதே நெறிமுறைகளைப் பின்பற்றி மாநிலங்களில் மாவட்ட அளவிலான நோய் பரவும் தரவுகளுக்காக தங்கள் மாநில அளவிலான செரோ ஆய்வை நடத்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகும் தொகுப்புகளில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது; கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தடம் அறிந்ததன் அடிப்படையில் கட்டுப்பாட்டு மண்டலங்களை நிர்ணயிப்பது; தற்போதைய மருத்துவ உள்கட்டமைப்பை, குறிப்பாக ஊரகப் பகுதிகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் வசதிகளை அதிகப்படுத்துவதற்காக அவசரகால நடவடிக்கை தொகுப்பை பயன்படுத்தி, அதனை அவ்வப்போது ஆய்வு செய்வது; இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்களின் படி உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பதிவு செய்வது என மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.