இணைந்த கரங்கள்.. கசப்பை மறந்து நட்பான ஜாட்-முஸ்லீம்கள்.. உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு விழுந்த செக்
டெல்லி: உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ளன. அங்கு எந்த கட்சியுடன் எந்த கட்சி கூட்டணி வைக்கப்போகிறது என்பதில் தெளிவற்ற நிலை நீடிக்கிறது. ஜாட் மற்றும் முஸ்லீம் ஓட்டுக்களை ஒருங்கிணைப்பதில் சமாஜ்வாதி கூட்டணி மற்றும் விவசாய சங்கங்கள் வெற்றி பெற்றுள்ளது பாஜகவுக்கு சவாலாக மாறியுள்ளது.
சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டன. இரு கட்சிகளும் காங்கிரசுடனும் கூட்டணி வைக்க விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.
ஆம் ஆத்மி கட்சியும் மாநிலத்தில் தனித்து களமிறங்க உள்ளது. தேர்தலுக்கு முந்தைய பெரிய கூட்டணிகள் உருவாகாத நிலையில், இந்த கட்சிகள் அனைத்தும் மாநிலத்தின் பல்வேறு மண்டலங்களிலும் சிறு சிறு சாதி அடிப்படையிலான கட்சிகளுடன் கூட்டணி அமைக்க ஆரம்பித்துள்ளன.
பெகாசஸ் உளவு விவகாரம்: வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி முடிவு!
கூட்டணி வைத்தால் பாஜகவுக்கு ஆதாயம்
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உத்திகள் எதிர்க்கட்சிகளுக்கு பெரிதாக பலனளிக்கவில்லை, 2017 உ.பி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சமாஜ்வாதி கட்சியுடன் கைகோர்த்தபோது அல்லது 2019 மக்களவை தேர்தல்களில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜுடன் கூட்டணி வைத்தபோது பரபரப்பாக பேசப்பட்டது. பாஜகவுக்கு பெரும் சவால் என்றார்கள். ஆனால் இரண்டு தேர்தல்களிலும், மாநிலத்தில் பாஜக ஈஸியாக பெரிய வெற்றிகளை பதிவு செய்தது.
கூட்டணி மேட்டர் இல்லை
இதுபற்றி, மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ரஷீத் கித்வாய் குறிப்பிடுகையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்தாலும், கருத்துக்கணிப்பு முடிவுகளில் வித்தியாசத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. "எதிர்க்கட்சி ஒற்றுமை அல்லது அதன் ஒற்றுமையின்மை என்பதெல்லாம் உத்தரபிரதேச தேர்தலை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை. யோகி ஆதித்யநாத்துக்கு இவை ஒரு தடையாக மாறும் என்று, நான், நினைக்கவில்லை," என்று அவர் கூறினார்.
பாஜகவிற்கு பெரிய கவலை
செப்டம்பர் 5 ஆம் தேதி, உ.பி.யின் முசாபர்நகரில் நடந்த 'கிசான் மகாபஞ்சாயத்தில்' ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்று கூடினர். அங்கு பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைட் பேசுகையில், வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஜெய் கிசான் மோர்ச்சா நிறுவனர் யோகேந்திர யாதவ் அளித்த பேட்டியில், வரும் தேர்தலில் விவசாயிகள் வாக்கு வங்கியை உருவாக்கி, பாஜக அரசுக்கு சவாலாக மாறுவோம் என்று கூறியுள்ளார்.
முஸ்லிம்-ஜாட் சகோதரத்துவம்
2013 ம் ஆண்டு முசாபர்நகர் மதக் கலவரத்தில், 50 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 50,000 பேர் பாதிக்கப்பட்டனர், இந்துக்களுக்கு, குறிப்பாக ஜாட் மற்றும் முஸ்லீம்களுக்கு இடையேயான உறவு இதனால் துண்டிக்கப்பட்டது. இது ஜாட் வாக்காளர்கள் இந்து அமைப்புகள் அல்லது பாஜகவை நோக்கி திரும்பினர். முஸ்லீம் வாக்காளர்கள் சமாஜ்வாதி கட்சியை நோக்கி நகர்ந்தனர். இதனால் இந்த பகுதி துருவப்படுத்துதல் அரசியலுக்கான மையப் புள்ளியாக மாறியது.
ஒன்றிணைந்த இந்து ஓட்டுக்கள்
அதைத் தொடர்ந்து நடந்த 2014 மக்களவைத் தேர்தலில், பா.ஜ.க.வின் சஞ்சீவ் பலியன், முசாபர்நகர் தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இவர் ஜாட் இனத்தைச் சேர்ந்தவர். முஸ்லீம்களுக்கு எதிரான முசாபர்நகர் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்டவராகும். அப்படிப்பட்டவருக்கு வாக்குகள் இந்த அளவுக்கு திரண்டன என்றால் எந்த அளவுக்கு விரிசல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
விவசாய சங்கங்கள் முக்கிய பங்கு
அதேநேரம், 2013ம் ஆண்டின் காயங்களை குணமாக்க வேண்டும் என்பதில் விவசாய சங்கங்கள் உறுதியாக உள்ளன. 'கிசான் மகாபஞ்சாயத்தில்', ராகேஷ் மற்றும் நரேஷ் திகைட் இந்த இரு சமூகங்களையும் மீண்டும் ஒன்றிணைத்து கொண்டு வந்தனர். முஸ்லீம் மற்றும் ஜாட் வாக்காளர்கள் மீண்டும் ஒன்றிணைவது, பாஜகவுக்கு பின்னடைவை தரும்.
சமாஜ்வாதி கட்சி மும்முரம்
இதனிடையே, மேற்கு உத்தர பிரதேசத்தில் ஓரளவு செல்வாக்கு கொண்டுள்ள ராஷ்டிரிய லோக் தளம் கட்சியுடன் சமாஜ்வாதி கூட்டணி அமைத்துள்ளது. இதுவும் பாஜகவுக்கு பின்னடைவாகும். ஆர்எல்டி கட்சி, ஜாட் வாக்காளர்களை பாஜகவுக்கு எதிராக திருப்பும் ஆளுமை கொண்டுள்ளது. இதேபோல பீம் ஆர்மியின் அரசியல் பிரிவான ஆசாத் சமாஜ் கட்சியோடு, சமாஜ்வாதி கூட்டணி அமைக்கும் முயற்சியில் உள்ளது. ஆர்எல்டி, ஆசாத் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி ஆகிய முக்கூட்டணி, மேற்கு உத்தர பிரதேசத்தில் ஜாட் வாக்குகளையும், முஸ்லீம் வாக்குகளையும் ஒரு சேர இழுத்து, பாஜகவுக்கு பெரும் அடியை கொடுக்க வல்லது என்கிறார்கள். மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளில் இந்த மண்டலத்தில் 120 தொகுதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சில பகுதிகள்
நரேந்திர மோடி அரசு பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட 2016 முதல் மேற்கு உ.பி., யின் விவசாயிகள், குறிப்பாக ஜாட் விவசாயிகள், பாஜகவுக்கு எதிராக அதிருப்தி வெளிப்படுத்தி வருகின்றனர். அப்போதிருந்து, இப்பகுதியில் உள்ள பெரும்பான்மையான வாக்காளர்கள் பாஜகவுக்கு எதிராக திரும்பிவிட்டனர். 2017 உபி சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில், விவசாயிகளின் ஆதரவுடன் மேற்கு உ.பி.யில் பாஜக முறையே, 37 மற்றும் 27 இடங்களை மட்டுமே வென்றது. இருப்பினும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் நரேந்தர் குமார் உ.பி. நிலவரம் பற்றி கூறுகையில், உத்தரபிரதேசத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை ஒட்டுமொத்தமாக கவனித்தால், வரவிருக்கும் தேர்தல்களில் பிஜேபி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என்றே தெரிகிறது. "விவசாயச் சட்டங்கள் போன்ற காரணிகள் பாஜகவின் வாய்ப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது மாநிலத்தின் சில பகுதிகளில் மட்டுமே இருக்கும். ஆனால் மத்திய உபி மற்றும் அவாத்தைப் பொறுத்த வரை இது அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை, இந்த பகுதிகளில் பாஜக சிறப்பாக செயல்படும், "என்று அவர் கூறினார்.