உத்தரகண்ட் பனிச்சரிவு: விபத்துக்கு முன்னும், பின்னும் புகைப்படங்கள் - அதிகாரிகள் ஷாக்
புது டெல்லி: உத்தரகண்ட் பனிச்சரிவு குறித்த சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை ஒன்று திடீரென்று சரிந்து விழுந்தது. இதனால் அங்குள்ள அலக்நந்தா தவுலிகங்கா நதிகளில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக ரைனி கிராமத்தில் தவுலி கங்கை நதிக்கரையில் இருந்த பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 170க்கும் மேற்பட்டோரை காணவில்லை.
தற்போது என்டிடிவி சில சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதில், பனிச்சரிவுக்கு முன்னும், பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சி தரும் புகைப்படம்
அதில், பிப்ரவரி 6 என்று காட்டப்படும் புகைப்படத்தில் Trishala பனிப்பாறையின் ஒரு குறிப்பிட்ட பனிப்பகுதி தெரிகிறது. ஆனால் பனிச்சரிவுக்குப் பிறகு, அதாவது பிப்ரவரி 8 ஆம் தேதி என்று காட்டப்படும் புகைப்படத்தில், அந்த முழு பனிக்கட்டியை காணவில்லை.
சில கிலோமீட்டர் தொலைவில்
பனிச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் இதே போன்ற மாற்றங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியின் கீழ் பனிமூட்டம் காணப்பட்டது, ஆனால் பனிச்சரிவுக்குப் பிறகு, பாதிப்பு தெரிகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட நாளில், ஒரு பெரிய பனிப்பாறை காணாமல் போயுள்ளது.
தபோவன் ஹைடல் ஆலை
பிப்ரவரி 6 ஆம் தேதி தபோவன் ஹைடல் ஆலைக்கு (Tapovan hydel plant) அருகிலுள்ள நதி, பச்சை நிறத்தில் குறுகிய நீரோட்டமாக இருந்தது. பிப்ரவரி 8 ஆம் தேதி, அங்குள்ள பழுப்பு நிற மண்ணின் பரந்த நதியாக உருமாறியதை காண முடிகிறது.
சிதைந்து சின்னாபின்னம்
பிப்ரவரி 6 அன்று, பனிச்சரிவுக்கு முந்தைய நாள், தபோவன் ஹைடல் ஆலையை தெளிவாக காண முடிகிறது. ஆனால், ஒரு நாள் கழித்து பனிச்சரிவு ஏற்பட்ட பிறகு, பிப்ரவரி 8 ஆம் தேதி, அந்த இடமே சிதைந்து போயிருப்பது புகைப்படம் மூலம் தெரிகிறது.