குச்சியால் அடித்த சிறுவர்கள்.. என்னையே அடிக்கிறியா.. சிறுவர்களை ஓட ஓட விரட்டியடித்த யானை
டெல்லி: சாலையை கடந்து செல்லும் யானைகளை சிறுவர்கள் சிலர் குச்சியால் அடித்து தாக்க முயல்வதும்.. சிறிது நேரத்தில் தன்னை தாக்கிய சிறுவர்களை, என்னையே அடிக்கிறியா என்று சொல்லும் வகையில் சிறுவர்களை ஓட ஓட விரட்டியடித்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக வனவிலங்குகள் - மனிதன் இடையே நடக்கும் மோதல்கள் அதிகரித்து வருகிறது.
வனவிலங்குகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு.. வனப்பகுதிகள் அழிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இதற்கு சொல்லப்படுகிறது.
உறுதி.. 9 கோவில் யானைகளை அசாமுக்கு அனுப்புவது இல்லை! உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
பயமுறுத்தும் வகையில்..
வறட்சி காலங்களில் போதிய உணவு இன்றி அலையும் விலங்குகளும் வழிமாறி ஊருக்குள் புகுந்துவிடுவதையும் காண முடிகிறது. வனவிலங்குகள் அஞ்சி ஆக்ரோஷமாக நடந்து கொள்வது..மனிதர்களை விரட்டுவது என அச்சுறுத்தும் வகையிலும் நடந்து கொள்கின்றன. ஆனால், இதைவிட கொடுமை என்னவென்றால், வனப்பகுதி வழியாக செல்லும் சாலைகளில் செல்லும் போது அங்கு வரும் விலங்குகளை தொந்தரவு செய்வது.. செல்பி எடுக்க முயற்சிப்பது.. என அதை பயமுறுத்தும் வகையில் சிலர் நடந்து கொள்கின்றனர்.
இணையத்தில் பரவும் வீடியோ
இதுபோன்ற நேரத்தில் கோபம் அடையும் விலங்குகள் ஆக்ரோஷமாக தாக்க முயற்சிக்கின்றன. இதனால், சில அசம்பாவிதங்களும் நேரிடும் அபாயம் ஏற்படுகிறது. அப்படித்தான் தற்போது ஒரு வீடியோ இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. காட்டு யானை ஒன்றை குச்சியால் அடித்து விரட்ட நினைக்கும் சிறுவர்களை யானை கோபம் அடைந்து தாக்குவதற்கு துரத்தும் காட்சிதான் அது. வனத்துறை அதிகாரி சுரேந்தர் மேஹ்ரா தனது ட்விட்டரில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
கோபம் அடைந்த யானை
சில வினாடிகளே ஓடும் இந்த வீடியோவில் காட்டு யானைகள் தனது கூட்டத்துடன் நிற்கின்றன. அப்போது ஒரு யானையை மட்டும் சிறுவன் ஒருவர் தனது கையால் வைத்திருக்கும் குச்சியால் அடிக்கிறான். இதனால், கோபம் அடைந்த யானை சிறுவனை துரத்த தொடங்குகிறது. சிறுவனும் ஆளை விட்டால் போதும் என ஓடுகிறான்... இந்த வீடியோவை பகிர்ந்து இருக்கும் வனத்துறை அதிகாரி "முட்டாள்தனம்" என்ற கேப்ஷனுடன் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
நெட்டிசன்கள் கோபம்
இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது... எங்கு நடைபெற்றது என்ற விவரங்கள் எதுவும் இல்லை. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சிறுவன் செயலை விமர்சித்து.. தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "மனிதர்கள் வனவிலங்குகளின் இடத்தை ஆக்கிரமித்ததோடு தற்போது விலங்குகளை விரட்டவும் தொடங்கியிருக்கின்றனர்" என்று கோபத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல் மற்றொரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில், இதுபோன்ற ஆபத்துக்களில் ஈடுபடுவதற்கு முன்பாக வனத்துறையினருக்கு ஏன் தகவல் தெரிவிக்கக் கூடாது என்று பதிவிட்டு இருக்கின்றனர்.
மனிதர்கள் பூமியில் வாழ தகுதியற்றவர்கள்
மற்றொரு நெட்டிசன் கூறுகையில், இந்த வீடியோவை பார்த்த பிறகு யானைகள் மனிதர்களை நசுக்குவதும் அவர்களின் வீடுகளை சேதப்படுத்துவதும் நியாயமானதாக தெரிகிறது. மனிதர்கள் இந்த பூமியில் வாழ தகுதியற்றவர்கள் என ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார். இன்னும் சிலரோ, இதுபோன்ற நபர்கள் மீது வனத்துறை வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சாடியுள்ளார். அதேபோல், வனவிலங்குகள் கிராமப்பகுதிகளுக்குள் வராமல் தடுக்க சில எதார்த்தமான நடவடிக்கைகளை வனத்துறை எடுக்க வேண்டும் என்றும் பதிவிட்டு இருக்கின்றனர்.