வைரஸ் ஷட் அவுட்.. இதை கழுத்தில் அணிந்தால் கொரோனா கெட் அவுட்.. நம்பினால் நீங்கள் "அவுட்"
டெல்லி: வைரஸ் ஷட் அவுட் என்ற ஒரு அட்டையை ஐடி கார்டு போல் மாட்டிக் கொண்டால் கொரோனா வைரஸை அண்டவிடாது என ஒரு செய்தி பரவி வருவதாகவும் , அது மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போன்ற பொருட்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால் தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கொரோனா வைரஸின் கோர பிடியில் நாம் சிக்கி திக்குமுக்காடி வருகிறோம். இந்த கொரோனா வைரஸ் நம்மை அண்டாமல் இருக்க யார் எதை விற்றாலும் சொன்னாலும் அதை வாங்குகிறோம், செய்கிறோம்.
இந்த தொற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்த கொரோனாவுக்கு டெக்ஸாமெதசோன் என்ற மருந்தை பிரிட்டன் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
தாராவியில் முடிகிறது...ஏன் மற்ற இடங்களில் முடியவில்லை...ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா தொற்று!
மாற்றம்
ஆனால் இந்த மருந்து பெரிய அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என விஞ்ஞானிகள் கூறினர். ரெம்டெசிவர் என்ற மருந்தும் கொரோனா தொற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மலேரியாவுக்கான மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயினும் கொரோனாவுக்கு எதிராக செயல்படும் என கூறப்பட்டது.
போராட்டம்
ஒரு பக்கம் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகமே போராடி வரும் நிலையில் சிலர் கொரோனாவுக்கு சிகிச்சை என்ற பெயரில் போலியான தயாரிப்புகளை பிரமோட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜப்பான் தயாரிப்பான வைரஸ் ஷட் அவுட் என்ற சாதனம் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து காக்கும் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
பரவல்
ஹாங்காங் போன்ற நாடுகளின் கடைகளில் பரவலாக விற்கப்பட்டு வருகிறது. இது ஆசிய கண்டத்தில் தடை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த பிராடக்ட் தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது. பிரபல ஆன்லைன் தளங்கள் மூலமும் விற்பனைக்கு வந்துள்ளது. இதை வாங்கி கழுத்தில் மாட்டிக் கொண்டால் காற்றின் மூலம் பரவும் துகள்கள் மற்றும் பாக்டீரியாக்கள், தொற்றுநோய் வைரஸ்களிடம் இருந்து தடுக்கும் என்கிறார்கள்.
கிளீனிக்குகள்
இந்த பாக்கெட்டில் குளோரின் டை ஆக்ஸைடு (சோடியம் குளோரைட், இயற்கை ஜியோலைட்) என்ற மூலப்பொருள் உள்ளது. இதை சுவாசித்தால் கண் எரிச்சல், தோல் அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும் என்கிறார்கள். இதை குறைந்த நோய் எதிர்ப்பு திறன் கொண்டவர்கள், முதியவர்கள், குழந்தைகள், மருத்துவமனை, கிளீனிக்குகளில் பணிபுரிவோர் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
30 நாட்கள்
இதை கழுத்தில் அணிவதால் பிளாங்க்டோனிக் பாக்டீரியா, இன்ஃப்ளூன்சா, உள்ளிட்ட மற்ற வைரஸ்களையும் நீக்கும். நோய் தாக்கும் அபாயமும் குறையும். கார்டை நீக்கிவிட்டு அப்படியே கழுத்தில் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும். 1 மீட்டர் சுற்றி வைரஸை அண்டவே விடாது. 30 நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்றும் அதற்கு மேல் இதை பயன்படுத்தாமல் தூக்கி எறிய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
ஜப்பான்
இது அமேசானில் ஒன்று 149 ரூபாய்க்கும், இரண்டு - 230 ரூபாய்க்கும் என 20 பாக்கெட்டுகள் ரூ 1764-க்கும் விற்பனையாகிறது. இது போன்ற பொருட்களை இந்திய அரசு அங்கீகரிக்கும் வரை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள். இதெல்லாம் தொற்றுநோய் போன்ற கடினமான சமயங்களில் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் யுத்தி எனவும் கூறுகிறார்கள். கொரோனாவை விரட்ட தாயத்து, கொரோனாவை விரட்ட யாகம் என்றாலே நம்மாட்கள் சிலர் நம்புவார்கள். ஜப்பான் நிறுவனத்தின் கண்டுபிடிப்பென்றால் சும்மா விடுவார்களா என்ன?