விஸ்வகர்மாக்கள்..வலிமையான பொருளாதாரம்..அருமையான பட்ஜெட்..நிர்மலா சீதாராமனை பாராட்டிய மோடி
நாட்டை செதுக்குபவர்கள் விஸ்வகர்மாக்கள் தான். அவர்களுக்காக இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்குமான பட்ஜெட் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி: வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளத்தை மத்திய பட்ஜெட் அமைக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டை செதுக்குபவர்கள் விஸ்வகர்மாக்கள் தான். அவர்களுக்காக இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் 2023-2024ஐ நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு இந்த பட்ஜெட்டை உருவாக்கி உள்ளது.
புதிய வருமான வரி முறையைப் பின்பற்றுவோரில், ஆண்டு மொத்த வருமானம் ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு இனி வருமான வரி கிடையாது. ஏற்கெனவே இந்த உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக இருந்த நிலையில், தற்போது இது ரூ.7 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட் குறித்து பேசுகையில், இந்த பட்ஜெட் சமூகத்தின் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகளின் கனவுகளை நனவாக்கும். இந்தியா வளர்ந்த நாடாக உருவாக இந்த பட்ஜெட் வலுவான அடித்தளத்தை அமைக்கும்.
வலுவான இந்தியாவை கட்டமைக்க இந்த பட்ஜெட் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளது. புதிய இந்தியாவை கட்டமைப்பதில் இந்த பட்ஜெட் பெரும் பங்காற்றும். அனைத்து துறை எதிர்பார்ப்புகளையும் இந்த பட்ஜெட் பூர்த்தி செய்துள்ளது என்று பாராட்டினார்.
பெண்கள் மீதான அரசாங்கத்தின் புதிய கவனத்துடன் முன்னோக்கிச் செல்லும். கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மகளிர் சுயஉதவிக்குழுக்கள் அவர்களை மேலும் மேம்படுத்தும். குடும்பங்களில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் சிறப்பு சேமிப்பு திட்டம் தொடங்கப்படும்.
அமிர்த காலத்தின் முதல் பட்ஜெட் அனைவருக்கும் பலன் தரும். இந்த பட்ஜெட் இந்தியாவின் வளர்ச்சிப் பாதைக்கு புதிய சக்தியைப் பாய்ச்சும். நாட்டை செதுக்குபவர்கள் விஸ்வகர்மாக்கள் தான். அவர்களுக்காக இந்த பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது அனைவருக்குமான பட்ஜெட் என்றும் மோடி தெரிவித்தார்.
இதனிடையே மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, 2023ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, "நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற பட்ஜெட் என்று குறிப்பிட்டுள்ளார் இது எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள் மற்றும் முதியோர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய பட்ஜெட் என்று கூறினார். பெண்களை கவுரவிக்கும் வகையில், சேமிப்பிற்கான புதிய திட்டத்தை முன்வைத்த நிதியமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய பட்ஜெட், நாரி சக்தி எவ்வாறு அதிகாரம் பெற்ற தேசத்தை உருவாக்க முடியும் என்பதை பிரதிபலித்தது என்றும் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.