விவிஐபி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல்.. முன்னாள் சிஏஜி உள்பட 4 அதிகாரிகள் வழக்கு தொடர அனுமதி கோரும் சிபிஐ
டெல்லி: ரூ .3,600 கோடி அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வி.வி.ஐ.பி ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சசி காந்த் சர்மா மீது வழக்குத் தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது. சசி காந்த் சர்மா முன்னாள் சிஏஜி (தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி) ஆகவும் இருந்தவர் ஆவார்.
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது முக்கிய பிரமுகா்கள் பயணம் செய்வதற்காக இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,600 கோடிக்கு ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. இதற்காக இந்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்துசெய்யப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக, ஹெலிகாப்டா் கொள்முதல் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் மீது அமலாக்கத் துறையினா் வழக்கு பதிவு செய்தனா். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட அவா், டெல்லியில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த ஊழலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சசி காந்த் சர்மா மீது வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது. அத்துடன் ஹெலிகாப்டர்களுக்கான ஒப்பந்தம் விவாதிக்கப்படும்போது முக்கிய முடிவெடுக்கும் பதவிகளை வகித்த சில முன்னாள் அரசு உயர் அதிகாரிகள் மீதும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதன் துணை குற்றப்பத்திரிகையில் பெயர்களை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சசி காந்த் சர்மா மற்றும் அப்போதைய ஏர் வைஸ் மார்ஷல் ஜஸ்பீர் சிங் பனேசர் ஆகியோர் மீது வழக்கு தொடர சிபிஐ அனுமதி கோரியுள்ளது.
சிஏஜியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, 2011 மற்றும் 2013 க்கு இடையில் சசி காந்த் சர்மா பாதுகாப்பு செயலாளராக இருந்தார். . இவர் மட்டுமின்றி மூன்று முன்னாள் இந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) அதிகாரிகள் ஆகியார் மீது வழக்கு தொடர பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications