'கொரோனா நலத்திட்டங்களின் செலவுக்கு சேமிக்கிறோம்..' பெட்ரோல் விலை உயர்வு.. தர்மேந்திர பிரதான் பதில்
டெல்லி: நாட்டில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது பிரச்சினை தான் எனக் குறிப்பிட்டுள்ள பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கொரோனா நிவாரண நலத்திட்டங்களுக்கான செலவை மத்திய அரசு சேமிப்பதாகக் கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தில் உள்ளது. நாட்டின் சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை சதமடித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மேந்திர பிரதான்
இந்நிலையில், எரிபொருள்களின் விலை உயர்வு குறித்துப் பேசிய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், எரிபொருள் விலைகள் உயர்வை மக்களைப் பாதித்துள்ளது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அதேநேரம் ஒரு ஆண்டில் மட்டும் கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ 35,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு எட்டு மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்க ரூபாய் ஒரு லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
நலத்திட்டங்களுக்கு மிச்சப்படுத்துகிறோம்
மேலும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழும் சில ஆயிரம் கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மோசமான காலங்களில், நலத்திட்டங்களுக்குச் செலவிடுவதற்காக நாங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறோம். எரிபொருள் விலை காரணமாக மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கூறுகிறது. அப்போது ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள காங்கிரஸ் அரசு விற்பனை வரியை ஏன் குறைக்கவில்லை.
காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள்
ராகுல் காந்தி இதற்கு பதிலளிக்க வேண்டும். அவர் ஏழைகள் குறித்து அவ்வளவு அக்கறை கொண்டிருந்தால், மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை மிக அதிகமாக இருப்பதால் வரிகளைக் குறைக்க மகாராஷ்டிரா முதல்வருக்கு அவர் அறிவுறுத்த வேண்டும்" என்றார். அதேநேரம் பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெட்ரோல் விலை ரூ 100 கடந்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.
பெட்ரோல் விலை
இந்தியாவில் VAT போன்ற மாநில வரிகள் காரணமாக பெட்ரோல் டீசல் விலை மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இதனால் தற்போது ஏழு மாநிலங்களில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் லடாக் ஆகிய மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ 100ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.