தமிழக ஆளுநர் ரவி குறித்து விவாதிக்க வேண்டும்! மக்களவையில் நோட்டீஸ் கொடுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி.!
டெல்லி: தமிழக ஆளுநர் ரவி குறித்து விவாதிக்கக் கோரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மக்களவையில் அவசரம் முக்கியத்துவம் வாய்ந்த நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
அதில் தமிழக ஆளுநரின் செயல்பாடுகளால் மாநில அரசின் நிர்வாகம் ஸ்தம்பிக்க செய்வதாகவும் 22க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கையில் எடுத்திருக்கிறார்.
ஆளுநர் ரவி
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்துக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆளுநரின் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தன. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் பற்றி விவாதிக்கக் கோரி மக்களவையில் நோட்டீஸ் கொடுத்து கவனம் ஈர்த்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்.
சரமாரி குற்றச்சாட்டு
அவர் அளித்துள்ள நோட்டீஸில், தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க சபை முன்வர வேண்டும் என்றும் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டியவர் மாநில அரசால் இயற்றப்பட்ட 22 க்கும் மேற்பட்ட மசோதாக்களை எந்த ஒப்புதலும் இல்லாமல் கிடப்பில் வைத்திருக்கிறார் எனவும் மாணிக்கம் தாகூர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநரின் பொறுப்புகள் என்ன என்பது பற்றி விவாதிக்க சபை முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஒப்புதல் தருவதில்லை
மாநில அரசால் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மற்றும் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், 2022 போன்ற மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதாக மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். தமிழக ஆளுநரின் நடவடிக்கைகள் மாநில அரசின் நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்கும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
திமுக உறுப்பினர்கள்
ஆளுநர் ரவிக்கு எதிரான இந்த விவகாரத்தை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையில் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கையில் எடுத்திருக்கிறார்.