இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட 3 காரணங்கள்! எப்போது சரியாகும்? சீனாவில் நடப்பது என்ன?
டெல்லி: இந்தியாவில் மட்டுமல்ல, சீனாவிலும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில், மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பல நிலக்கரி மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
Recommended Video
சீனாவில், பல பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சில மணிநேரங்கள் மட்டுமே மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
சீனா "உலகின் தொழிற்சாலை" என்று அழைக்கப்படுகிறது, இதன் காரணமாக அனைவரின் கவனமும் இப்போது சீனாவின் மீது குவிந்துள்ளது. இன்னொரு பக்கம் லெபனானும் இருளில் மூழ்கியுள்ளது. அங்கே கடுமையான மின்வெட்டு தலை விரித்து ஆடுகிறது. ஐரோப்பாவில் எரிவாயுக்காக மக்கள் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.
நிலக்கரி தட்டுப்பாடு; மின் வெட்டு ஏற்படும் சூழல்; மத்திய அரசு பொறுப்பின்றி இருக்கிறது -வேல்முருகன்
4 நாட்கள் மட்டுமே
உலகம் முழுவதும் மின்சார தட்டுப்பாடு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பல நாடுகள் இருளில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. இந்தியாவில் அரசு தரவுகளின்படி, இப்போது அனல் மின் நிலையங்களில் 3 முதல் 4 நாட்கள் நிலக்கரி மட்டுமே உள்ளது. உத்தரபிரதேசத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக பல மின் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை அமெரிக்காவில், ஒரு கேலன் பெட்ரோலுக்கான விலை $ 3.25 ஐ எட்டியது. ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் இது $ 1.27 என்ற அளவுக்கு இருந்தது. கொரோனாவை வீழ்த்தி உலக பொருளாதாரம் மீண்டும் உயருவதால், திடீர் மின்சார தேவை அதிகரிப்பை உலகம் சந்திக்கிறது. இதற்கு ஏற்ற சப்ளை இல்லாததால், மின் வெட்டு ஏற்படுகிறது.
மின் உற்பத்தி நெருக்கடி
நமது நாட்டில் டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் உட்பட நாட்டின் பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில், அதிக மழை காரணமாக நிலக்கரி சுரங்கங்களை மூட வேண்டியிருந்தது. நிலக்கரி சுரங்கங்கள் பணிகளை தொடங்கிய இடங்களில், நிலக்கரி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் விலை உயர்ந்து வருகிறது.
சீனாவை முந்திய இந்தியா
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான நட்பு அதிகரித்து குவாட் நாடுகள் கூட்டணி அமைந்ததன் காரணமாக, ஆஸ்திரேலியாவிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்வதை சீனா நிறுத்திவிட்டது. இந்தியா இதை சாதகமாக பயன்படுத்தி ஆஸ்திரேலியாவில் இருந்து அதிக அளவில் நிலக்கரியை வாங்கியுள்ளது. ஆனால், இந்தியா போன்ற பெரிய நாட்டிற்கு இது போதாது என்பதுதான் சிக்கல். மற்ற நாடுகளில் இருந்து நிலக்கரி பெறுவது அதிக செலவீனத்தை ஏற்படுத்தும். ஏனெனில் அங்கு நிலக்கரி விலை அதிகமாகும்.
மின் வெட்டு ஏற்படாது
நாட்டின் நிலக்கரி நெருக்கடி குறித்து, மத்திய நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, அளித்துள்ள பேட்டியில், 'மின் விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படும் அபாயம் இல்லை. 24 நாட்கள் மின் உற்பத்தி தேவைக்கு சமமான 43 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பு கோல் இந்தியா லிமிடெட்டில் உள்ளது. நாட்டில்நிலக்கரி இருப்பு குறைந்துள்ளது என்பது உண்மைதான். ஜார்க்கண்ட் போன்ற மாநிலத்தில் கனமழை காரணமாக நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தால், நிலக்கரி சுரங்கங்கள் மழையால் பாதிக்கப்படாத மாநிலங்களிலிருந்து நிலக்கரியை இறக்குமதி செய்யலாம். அங்கு நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்திலும் மின் வெட்டு
ஆனால் நிலக்கரி உற்பத்தி அதிகரித்தாலும், மழை காரணமாக நிலக்கரி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இது மற்றொரு சிக்கலாகும். நிலக்கரி பற்றாக்குறையால், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ஆந்திராவில் மின் உற்பத்தி கூட பாதிக்கப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு இல்லை என்கிறது அரசு
இரண்டு நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி இருப்பு இருப்பதாகக் கூறி, மின் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோக நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு மின்வெட்டு குறித்து எச்சரிக்கை மெசேஜ்களை அனுப்பியுள்ளனர். ஆனால் மத்திய, நிலக்கரி அமைச்சகம் நாட்டில் நிலக்கரிக்கு தட்டுப்பாடு இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறது.
இரு வாரங்கள் ஸ்டாக் இருக்கனும்
பல மின் நிலையங்களில், நிலக்கரி இருப்பு 3 முதல் 4 நாட்களுக்கு மட்டுமே இருப்பதாக கூறுகின்றன. அரசின் வழிகாட்டுதலின்படி இது மிக குறைந்த பங்காக கருதப்படுகிறது. விதிமுறைப்படி, குறைந்தது இரண்டு வாரங்களுக்கு மின் உற்பத்தி நிலையங்களில், நிலக்கரி இருப்பு இருக்க வேண்டும். இந்தியாவில், உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 70 சதவீதம் நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது என்பதால், இது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
புள்ளி விவரம்
மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) தரவுகளின்படி, மொத்த மின் நிலையங்களில், 17 மின் நிலையங்களில் நிலக்கரி பூஜ்ஜிய இருப்பு உள்ளது. 21 உற்பத்தி மையங்களில் ஒரு நாள் கையிருப்பு மட்டுமே உள்ளது. 16 ஸ்டேஷன்களில் இரண்டு நாள் ஸ்டாக் மட்டுமே எஞ்சியுள்ளது. 18 மின் உற்பத்தி நிலையங்களில் மூன்று நாட்கள் நிலக்கரி ஸ்டாக் மட்டுமே உள்ளது. மொத்தமுள்ள 135 மின் நிலையங்களில், 107ல் ஒரு வாரத்திற்கு மேல் நிலக்கரி இருப்பு இல்லை.
நிலக்கரி ஆலைகள்
கொரோனா காலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் குறைந்துவிட்டன. இதன் காரணமாக உலகம் முழுவதும் நிலக்கரியின் தேவையும் குறைந்தது. இதன் காரணமாக பல நிலக்கரி சுரங்கங்களை மூட வேண்டியிருந்தது. கொரோனா நெருக்கடி குறைந்ததால், தொழில்கள் மற்றும் வணிகங்கள் உலகம் முழுவதும் மீண்டும் தொடங்கின. அதனால் நிலக்கரியின் தேவையும் அதிகரித்தது. மூடப்பட்ட நிலக்கரி சுரங்கங்களை ஒரு நொடியில் தொடங்க முடியாது. அவற்றைத் தொடங்க ஒரு செயல்முறை உள்ளது. இது சிறிது நேரம் எடுக்கும். இத்தகைய சூழ்நிலையில், தேவை அதிகரிக்கும் போது, நிலக்கரியை விரைவாக வழங்க முடியவில்லை. இதன் காரணமாக, நிலக்கரி பற்றாக்குறை நெருக்கடி உலகம் முழுவதும் எழுந்தது. இப்போது போதுமான நிலக்கரி இருப்பு உள்ள நாடுகள் நிலக்கரியின் விலையை உயர்த்தியுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், அதிக விலைக்கு நிலக்கரியை இறக்குமதி செய்ய இந்தியா தடை விதித்துள்ளது. இந்த காரணமாக, மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நிலக்கரியின் இருப்பு என்ன?
சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா நிலக்கரி உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக உள்ளது. உலகின் நான்காவது மிகப்பெரிய நிலக்கரி இருப்பு இந்தியாவிடம் உள்ளது. இந்தியாவில் நிலக்கரியின் பெரும்பகுதி ஜார்க்கண்ட், ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் காணப்படுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாட்டின் 70 சதவீத நிலக்கரி இருப்பு உள்ளது. பெரும்பாலான நிலக்கரி இருப்பு மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
குஜராத்துக்கு 1850 மெகாவாட், பஞ்சாப்புக்கு 475, ராஜஸ்தானுக்கு 380, மகாராஷ்டிராவுக்கு 760 மற்றும் ஹரியானாவிற்கு 380 மெகாவாட் வழங்கும் டாடா பவர், குஜராத் மாநிலம் முந்த்ராவில் உள்ள நிலக்கரி மின் நிலையத்தை மூடியுள்ளது. அதானி பவரின் முந்த்ரா யூனிட்டும் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொள்கிறது.
3 காரணங்கள்
இந்தியாவில் நிலக்கரி இருப்பு சுரங்கங்களில் அப்படியேதான் உள்ளது. ஆனால், மூன்று பிரச்சனைகள் மட்டுமே முக்கியமாக பார்க்கப்படுகின்றன. ஒன்று, சுரங்கங்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. இரண்டு, பல சுரங்கங்கள் கொரோனா காலத்தில் மூடப்பட்டதால் அவை இப்போதுதான் திறந்து வேலையை தொடங்கியுள்ளன. எனவே உற்பத்தி உயரவில்லை, மூன்று, உற்பத்தி நடந்து கொண்டிருந்தாலும், மழையின் காரணமாக, நிலக்கரி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இது தற்காலிக பிரச்சினைதான். சரி செய்து விட முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.