கலங்கடிக்கும் கருப்பு பூஞ்சை.. அறிகுறிகள் என்ன? யாருக்கு பரவ வாய்ப்பு அதிகம்? இதோ எய்ம்ஸ் கைட்லைன்
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் மத்தியில் வேகமாக பரவி வரும் கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமைகோசிஸ் என்ற நோயை கண்டறிந்து சரி செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களை எய்ம்ஸ் வெளியிட்டுள்ளது.
Recommended Video
கட்டுப்பாட்டில் இல்லாத அளவுக்கான நீரிழிவு நோயாளிகள், அதிக அளவு ஸ்டீராய்டு உள்ள நோயாளிகளை, கரும்பூஞ்சை தாக்கும் அபாயம் உள்ளதாக எய்ம்ஸ் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில், பூஞ்சை தொற்று மியூகோமிகோசிஸால் 90 பேர் இறந்துள்ளனர். ராஜஸ்தானில் கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக 100 க்கும் மேற்பட்ட கேஸ்கள் பதிவாகியுள்ளன.
எய்ம்ஸ் வெளியிட்ட அறிவிப்பு
ராஜஸ்தான் அரசு கருப்பு பூஞ்சையை பெருந்தொற்று என்று அறிவித்துள்ளது. அதாவது கொரோனாவுக்கு ஈடாக இந்த தொற்றுநோயை அந்த மாநிலம் கண்காணிக்கிறது. இந்த நிலையில்தான் எய்ம்ஸ் இந்த நோய் பரவல் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பிளாக் பங்கஸ் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளவர்கள் யார்?
கட்டுப்பாடு இல்லாத நீரிழிவு நோயாளிகள், கீட்டோஅசிடோசிஸ் எனக் கூறப்படும் போதிய அளவு இன்சுலின் சுரக்காமல் அதிக சுகர் பிரச்சினையால் அவதிப்படுவோர், ஸ்டெராய்டு மருந்துகளை செலுத்தும்போது சுகர் அளவு அதிகரித்தல் போன்றவை, நீரிழிவு நோயாளிகளுக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
ஸ்டெராய்டுகள் செலுத்துவது
நோயெதிர்ப்பு தடுப்பு அல்லது புற்றுநோய் சிகிச்சை, நாள்பட்ட நோய் பாதிப்புள்ளோரும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிக அளவு ஸ்டெராய்டுகள் செலுத்த வேண்டிய நோயாளிகள், ஸ்டெராய்டுகளை நீண்ட காலமாக பெறும் நோயாளிகள், டோசிலிசுமாப் ஊசி செலுத்துவோர் போன்றோருக்கு நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஆக்சிஜன் பெறும் நோயாளிகள்
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்படுவது, ஆக்சிஜன் செலுத்தப்படும் நோயாளிகள், வென்டிலேட்டர் மூலம் ஆக்ஸிஜன் பெறும் நோயாளிகள், கரும்பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பு அதிகம்.
கரும்பூஞ்சை நோயின் அறிகுறிகள்
மூக்கிலிருந்து, வழக்கத்திற்கு மாறான நிறத்தில் அழுக்கு வெளியேறுவது, மூக்கிலிருந்து ரத்தம் வருவது கரும்பூஞ்சை நோய் தாக்குதலுக்கான அறிகுறி. மூக்கடைப்பு, தலைவலி அல்லது கண் வலி, கண்ணை சுற்றி வீக்கம், இரட்டை பார்வை, கண்கள் சிவப்பாக மாறுவது, கண் பார்வை மங்குவது, கண்களை மூட கஷ்டப்படுவது, கண்களை திறக்க முடியாமல் அவதிப்படுவது போன்றவை பிளாக் பங்கஸ் நோய்க்கான அறிகுறியாக இருக்கக் கூடும்.
முகத்தில் கூச்ச உணர்ச்சி
முகத்தில் உணர்ச்சி குறைவது அல்லது முகத்தில் கூச்ச உணர்ச்சி இருப்பது ஆகியவையும், அறிகுறிகளாக இருக்க கூடும். வாயை திறக்க கஷ்டப்படுவது, வாயால் மெல்ல முடியாமல் கஷ்டப்படுவது, பல் விழுவது, வாய்க்கு உள்ளே வீக்கம் அல்லது கருப்பாக இருப்பது போன்ற அறிகுறிகளும், கரும் பூஞ்சை தொடர்பானதாக இருக்கக் கூடும்.
அறிகுறிகள் இருந்தால் என்ன செய்யலாம்?
தினமும் நல்ல வெளிச்சத்தில் நமது முகத்தை, பரிசோதித்து பார்த்துக் கொள்ளலாம். முகத்திலோ, கண்ணை சுற்றியோ வீக்கம் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். டார்ச் லைட்டை பயன்படுத்தி மூக்கு, வாய்க்குள் பரிசோதித்து கொள்ளலாம். காது, மூக்கு, தொண்டை நிபுணரையோ, கண் மருத்துவரையோ அணுகி, காண்பிக்கலாம். அவர் இது வித்தியாசமான அறிகுறியா, அல்லது வேறு பிரச்சினையா என்பதை கண்டறிந்து சொல்வார்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்துங்கள்
தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். ஃபாலோஅப் செய்ய வேண்டும். ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். பிற இணை நோய்களுக்கு உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். ஆன்டி-பங்கலுக்கு சுய மருந்துகளை எடுக்க கூடாது. மருத்துவர் அறிவுறுத்தினால், எம்ஆர்ஐ அல்லது சிடி கான்ட்ரஸ்ட் பரிசோதனை செய்து பார்க்க வேணும். இவ்வாறு எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.