தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் தாக்குமா? பிஎப் 7 கொரோனா வைரசின் அறிகுறிகள் என்ன? முழு விளக்கம் இங்கே
டெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இந்த வைரசை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா தயார்படுத்தி வருகிறது. ஆனால் இதுவரையில் பரவிய கொரோனா திரிபுகளில் இதுதான் மிக வேகமாக பரவக்கூடியதாம் என்றும், இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் எப்படி இருக்கும்? என்பது குறித்த தகவல்களை காணலாம்.
கொரோனாவை உலக நாடுகள் மெல்ல மெல்ல மறக்கத் தொடங்கியிருக்கும் வேளையில், மீண்டும் சீனாவில் இருந்தே அதிர்ச்சி தகவல் மட்டும் இன்றி வைரசும் சேர்ந்த பரவி உலக நாடுகளை பீதி அடைய செய்துள்ளது.
சீனாவில் தற்போது பரவி நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான தொற்று பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒமிக்ராவின் மாறுபாட்டு வகையான பிஎப் 7 வகை கொரோனா மீண்டும் ஒரு கொரோனா அலையை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தை கிளப்பி விட்டிருக்கிறது.

வேகமெடுக்கும் கொரோனா
இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் சீனா விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. சீனாவில் போதிய அளவு தடுப்பூசி போடப்படாததும் இந்த வைரஸ் பரவலுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. சீனாவில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், பிரான்சு உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியிருக்கும் இந்த பிஎப் 7 வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. குஜராத்தில் 2 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் மோடி ஆலோசனை
இந்தியாவில் கொரோனா முன்பு போல தீவிரப்பாதிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் மத்திய மாநில அரசுகள் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட ஆரம்பித்துள்ளன. சர்வதேச பயணிகளுக்கு நாளை முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதமர் மோடியும் டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர்.

அறிகுறிகள் எப்படி இருக்கும்?
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனாவில் பரவி வரும் கொரோனா பரவல் பற்றி அதிகாரிகள் பிரதமருக்கு எடுத்து விளக்கினர். இந்த ஆலோசனையின் போது, மெத்தனமாக செயல்படாமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அனைத்து மட்டங்களிலும் கொரோனா உள்கட்டமைப்பு வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த வைரசை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா தயார் படுத்திவரும் நிலையில், இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகள் எப்படி இருக்கும்? என்பது குறித்த தகவல்களை காணலாம்.

மிக வேகமாக பரவக்கூடியதாம்
* இந்த வைரஸ் அதிகவேகமாக பரவும் தன்மை கொண்டது. அதாவது பாதிக்கப்பட்ட ஒருவரிடம் இருந்து 18 பேர் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள்.
* தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் இந்த வைரஸ் தொற்றும் என்று சொல்கிறார்கள்
* இதுவரையில் பரவிய கொரோனா திரிபுகளில் இதுதான் மிக வேகமாக பரவக்கூடியதாம்.
* அமெரிக்காவில் கடந்த அக்டோபர் மாதத்தில் பதிவான பாதிப்புகளில் 5 சதவீதம் பிஎப் 7 வைரசால் ஏற்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

தொண்டைபுண், சளி இருமல்,
* இந்த வைரஸ் சுவாச குழாயின் மேல்பகுதியில் தொற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த வைரஸ் பாதித்தால் காய்ச்சல், தொண்டைபுண், சளி இருமல், சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஏற்படுகிறது.
* சீனாவில் ஒமிக்ரானின் புதிய வேரியண்ட் வகை கொரோனாவான பிஎப் 7 அங்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசை எதிர்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியாவும் தயார் படுத்தி வருகிறது. பிஎப் 7 கொரோனா வைரசின் அறிகுறிகள் என்ன? என்ற விவரங்களை இங்கே காணலாம்.

உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும்
சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு என வயிறு தொடர்பான அறிகுறிகள் ஏற்படும் என்கிறார்கள். எனவே இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம். தனிமைப்படுத்திக்கொள்வது, மருந்து சிகிச்சையில் குணம் அடைய முடியும் என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications