'மக்கள் ஊரடங்கு..' மோடி அழைப்பு.. மார்ச் 22ம் தேதி மக்கள் செய்ய வேண்டியது என்ன?
டெல்லி: மார்ச் 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்கு தாங்களே ஊரடங்கு உத்தரவை ஏற்படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டு இருக்கிறார்.
நேற்று இரவு 8 மணி அளவில் தொலைக்காட்சியில் தோன்றிய பிரதமர் மோடி, அரை மணி நேரத்துக்கும் மேலாக ஆற்றிய உரையில் முக்கியமான விஷயமாக இதைக் குறிப்பிட்டார்.
ஜனதா கர்பியூ (Janata Curfew)என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. தமிழில், 'மக்கள் ஊரடங்கு' என்று பொருள். அதே நேரம் மாலை 5 மணி அளவில் வீட்டின் பால்கனி அல்லது ஜன்னலோரம் வந்து நின்று சுகாதார துறை ஊழியர்களின் முயற்சிகளை பாராட்டும் விதமாக கை தட்டி, தங்கள் ஆதரவை தெரிவிக்கலாம் என்றும் மோடி தெரிவித்திருந்தார்.
இது எப்படி செயல்படுகிறது, எவ்வாறு பொதுமக்களாகிய நாம் அவருக்கு ஆதரவு தெரிவிக்க முடியும் என்பது பற்றி ஒரு பார்வை:
மக்கள் ஊரடங்கு என்றால் என்ன?
மக்கள் தங்களைத் தாங்களே வீடுகளுக்குள் தனிமைப்படுத்தி கொள்வதைத்தான் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் மோடி. மிக அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
மக்கள் ஊரடங்கு எப்போது?
மார்ச் 22ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது.
மக்கள் ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல முடியுமா?
பிரதமர் மோடியின் கோரிக்கை என்னவென்றால், அனைவருமே வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். அதே நேரம் மீடியா, மருத்துவர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் இருக்க கூடியவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் கோரிக்கையை மீறினால் என்னவாகும்?
இது அரசு கட்டாயப்படுத்தி அமலாக்கும் ஊரடங்கு கிடையாது. மக்கள் தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஊரடங்கு. எனவே இதை மீறி வெளியில் சென்றால் காவல்துறை உங்களை கைது செய்யப் போவது கிடையாது. ஆனால் நோயை எதிர்த்து மொத்த உலகமும் போராடிக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில், அதற்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பழி வேண்டுமானால், வரலாற்றில் உங்கள் மீது கரும்புள்ளியாக மாறும். இங்கு கேள்வி கேட்கப்போவது காவல்துறை இல்லை, உங்கள் மனசாட்சி மட்டுமே.
கொரோனா எதிரொலி.. புதுச்சேரி ஏனாமில் 144 தடை.. பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடு!
மக்கள் ஊரடங்கு ஏன் அவசியம்?
மக்கள் பீதியின் காரணமாக மொத்தமாக பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். இது செயற்கையாக அத்தியாவசிய பொருட்கள் மீதான பற்றாக்குறையை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருந்தால் இதுபோன்ற பீதி இருக்காது. கொரோனா வைரஸ் மற்றும் பிற ஏதாவது நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் மருத்துவமனை செல்வார்கள். வீடுகளுக்குள்ளேயே இருப்பதால் மக்களுக்கு அது தொடர்பாக யோசிப்பதற்கு கால அவகாசம் கிடைக்கிறது. நோயை எதிர்கொள்ளும் வலிமையை அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பெறுவார்கள். இதுதான் பிரதமர் எதிர்பார்க்கும் திட்டம்.