யாரும் நெருங்கக்கூட இல்லை.. 9 ஆண்டுகளுக்கு பிறகும் டாப் இடத்தில் பிரதமர் மோடி.. வெளியான புது சர்வே
பிரமதர் மோடியின் இமேஜ் 9 ஆண்டுகளாக மக்களிடம் டாப் இடத்தில் உள்ளது புது சர்வே-இல் தெரிய வந்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், பாஜக குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் புதிய கருத்துக்கணிப்பின் தற்போதைய முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு மக்கள் தங்கள் பதில்களை அளித்துள்ளனர்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்று ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இதற்கான பணிகளை அவர்கள் இப்போதே தொடங்கிவிட்டனர்.
அதற்கு முன்பு இந்தாண்டு மட்டும் மொத்தம் 9 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவே ஆட்சியில் உள்ள நிலையில், அதுவும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

தேர்தல்
அடுத்த வாரம் மூன்று வடமாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அடுத்த வரும் மாதங்களில் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இவை அனைத்திலும் வெல்ல வேண்டும் என்பதே பாஜகவின் இலக்காக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பாஜக செயற்குழு கூட்டத்தில் கூட தேர்தல் குறித்தும் பிரதமர் மோடியின் சாதனைகளை எப்படி மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றே விவாதித்தனர்.

புது சர்வே
இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே சி வோட்டர்ஸுடன் இணைந்து மூட் ஆப் தி நேஷன் என்ற பெரிய சர்வே ஒன்றை நடத்தியிருந்தது. நாடு முழுக்க இருக்கும் 1.40 லட்சம் பேரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு இந்த கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி குறித்தும் மத்திய பாஜக அரசு குறித்தும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு அவர்கள் அளித்த பதில்களைத் தொகுத்து மூட் ஆப் தி நேஷன் என்ற பெயரில் கருத்துக்கணிப்பாக வெளியிட்டுள்ளனர்.

பாஜக அரசு
இந்த மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பின்படி, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு மக்களிடையே இப்போது 67% ஆதரவு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 9 ஆண்டுகள் ஆட்சிக்குப் பின்னரும் பாஜக ஆட்சி மீதான ஆதரவு என்பது 67% உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மக்கள் ஆதரவு 56% இருந்த நிலையில், இப்போது அது சுமார் 11% அதிகரித்து 67% உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோடி அரசுக்குக் கிடைத்த இரண்டாவது அதிகபட்ச ஆதரவு இதுவாகும்.

பிரதமர் மோடி
அடுத்துக் குறிப்பாகப் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்று கேட்டிருந்தனர். அதில் சுமார் 72% பேர் மோடியின் செயல்பாடுகள் திருப்திகரமாகவே இருந்ததாகத் தெரிவித்தனர். கடந்த ஆக்ஸ்த் மாதம் 66% இது இருந்த நிலையில், தற்போது அது 6% அதிகரித்து 72%ஆக உள்ளது. மோடியின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதாக இப்போது 16% பேர் மட்டுமே சொல்லியுள்ளனர். இது கடந்த ஆகஸ்ட் மாதம் 26%ஆக இருந்த நிலையில், இப்போது இதுவும் சுமார் 10% குறைந்துள்ளது.

அடுத்த பிரதமர்
வரும் தேர்தலில் யார் பிரதமராகத் தொடர வேண்டும் என்ற கேள்விக்கு சுமார் 52% பேர் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பிரதமர் பதவியில் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வர வேண்டும் என 14 சதவீதம் பேர் மட்டுமே விரும்புவதாகக் கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. அதேபோல உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் ஆக வேண்டும் என்று 26 சதவீதம் பேர் கூறுகின்றனர் 25% பேர் யோகி ஆதித்யநாத் பிரதமராக வர வேண்டும் என்பதில் ஆதரவு தெரிவிக்கின்றனர். மேலும், 16% பேர் நரேந்திர மோடிக்குப் பிறகு மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி பிரதமராக வேண்டும் என்று விரும்புகின்றனர்.

முக்கியம்
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 9 ஆண்டுகளாக எந்தவொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்களிடையே எதிர்ப்பு மனநிலை இயல்பாகவே உருவாகும். இருப்பினும், அதையும் தாண்டி பிரதமர் மோடி இமேஜ் பாஜக அரசுக்கு எதிராகப் பெரிய அதிருப்தி ஏற்படுவதைத் தடுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications