டக்குனு மாயமான 2000 ரூபாய் நோட்டுகள்! புரியாமல் குழம்பும் நெட்டிசன்கள்! ஓ இதுதான் காரணமா! சுவாரசியம்
டெல்லி: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆண்டு புத்தம்புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளுக்கு இப்போது என்ன தான் ஆச்சு என யோசித்து இருக்கீங்களா! வாங்க பார்க்கலாம்.
மத்திய அரசு கடந்த 2016 நவ.8ஆம் தேதி பணமதிப்பிழப்பை அறிவித்தது. அப்போது புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைப் பிரதமர் மோடி வெளியிட்டார்.
அந்தச் சமயத்தில் இந்த பணமதிப்பிழப்பு நீக்கத்தைப் பலரும் வரவேற்றனர். குறிப்பாக இதன் மூலம் கருப்புப் பணம் முற்றிலுமாக ஒழியும் என்றும் இதற்காகப் பொதுமக்கள் கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டும் என்றும் பலரும் குறிப்பிட்டனர்.
பணமதிப்பிழப்பு
நாட்டில் புழக்கத்தில் இருந்த சுமார் 80% நோட்டுகளை ஒரே இரவில் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இது அப்போது நாட்டில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. தங்கள் கைகளில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றவே பொதுமக்கள் திண்டாடினர். இதனால் அப்போது பொதுமக்கள் பலரும் வங்கிகளில் பல பணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. பலராலும் தங்கள் கைகளில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த முடியாத சூழலே இருந்தது.
கஷ்டம்
ஒரு 500 அல்லது 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றவே பல மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. அந்தச் சமயம் மத்திய அரசு புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு இருந்தது.. அதன் பின்னர் ரிசர்வ் வங்கி தொடர்ந்து சில மாதங்கள் புதிய நோட்டுகளை அச்சடித்துத் தள்ளியது. இருப்பினும், சுமார் 80% நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், அந்த அளவுக்கு விரைவாக ஈடு செய்துவிட முடியவில்லை. இதனால் மக்கள் பெரும் துயரத்தை எதிர்கொண்டனர்
2000 ரூபாய் நோட்டுகள்
பணமதிப்பிழப்பு தொடர்பான வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அது ஒரு பக்கம் இருந்தாலும் கூட புதிய 2000 ரூபாய் நோட்டுகளை நீங்கள் பார்த்தே சில காலம் ஆகியிருக்கும். இது ஏதோ உங்களுக்கு மட்டும் நடந்தது என நினைத்துவிடாதீர்கள். உண்மையிலேயே 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து மெல்லக் குறைந்து வருகிறது. இப்போது ஏடிஎம் இயந்திரங்களில் கூட 2,000 ரூபாய் நோட்டுகள் வராமல் இருப்பதை நீங்கள் கவனித்து இருக்கலாம்.
புழக்கம் குறைந்தது
இந்தியாவிலேயே அதிக மதிப்பு வாய்ந்த நோட்டாக இருக்கும் ரூ.2,000 நோட்டை நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்? இதைப் பற்றி உங்களுக்கு எதாவது கேள்வி வந்தது உண்டா? இதற்கான பதிலை வாருங்கள் பார்க்கலாம்.. 2000 ரூபாய் நோட்டு புழக்கம் வெகுவாக குறைந்து உள்ளது உண்மைதான். அதற்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட காரணம் இருக்கிறது என்று சொல்ல முடியாது.. 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைய பல்வேறு காரணங்கள் உள்ளன.
ரிசர்வ் வங்கி
இதில் முக்கிய காரணம்.. கடந்த சில ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி புதிதாக ஒரு 2,000 ரூபாய் நோட்டைக் கூட அச்சிடவில்லை, சமீபத்திய இது தொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலும் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதிலும் கூட ரிசர்வ் வங்கி இதையே தான் கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி கடந்த 2019ஆம் ஆண்டு முதலே ரூ.2,000 நோட்டுகளை அச்சிடுவதை நிறுத்திவிட்டது. அதன் பின்னர் மூன்று நிதியாண்டுகளிலும் ரிசர்வ் வங்கி ஒற்றை 2000 ரூபாய் நோட்டைக் கூட புதிதாக அச்சிடவில்லை.
அச்சடிப்பு குறைப்பு
முழுமையாக நிறுத்தப்படும் முன்னரே 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை ரிசர்வ் வங்கி குறைத்தே வந்தது. பணமதிப்பு இழப்பு அறிவிக்கப்பட்ட நிதியாண்டில், அதாவது 2016-17ல் 3,542.991 மில்லியன் (சுமார் 352 கோடி நோட்டுகள்) 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சப்பட்டன. 2017-18இல் 111.507 மில்லியன் (11 கோடி நோட்டுகள்) 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அச்சப்பட்டன. 2018-19இல் இது மேலும் குறைந்து வெறும் 46.690 மில்லியன் (4 கோடி நோட்டுகள்) நோட்டுகளாகக் குறைந்துவிட்டது.
ஏடிஎம் இயந்திரங்கள்
அதன் பின்னர் ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இந்த 2,000 ரூபாய் நோட்டுகள் மெல்ல அகற்றப்பட்டன. இதற்குத் தொழில்நுட்ப காரணங்களை ரிசர்வ் வங்கி குறிப்பிட்டது. அதன் பின்னர், மெல்ல வங்கிகளில் இருந்தும் கூட இந்த 2,000 ரூபாய் நோட்டுகள் அகற்றப்பட்டன. 2,000 ரூபாய் நோட்டுகளுக்கு சில்லறை கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது. இதனால் அதன் புழக்கம் குறைந்ததை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோன்ற காரணங்களே கடந்த சில ஆண்டுகளில் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வெகுவாக குறையக் காரணமாகும்.
என்ன காரணம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை போது, அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டன. முக்கியமாக இது கருப்புப் பணத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்பட்டது. இப்போது அதே காரணத்திற்காகக் கூட ரிசர்வ வங்கி 2000 ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து குறைத்து இருக்கலாம். அதேபோல கைப்பற்றப்படும் போலி நோட்டுகளில் பெரும்பாலானவை 2000 ரூபாய் நோட்டுகள் தான்.
குறைவு
நாட்டில் கைப்பற்றப்பட்ட போலி ரூ.2,000 நோட்டுகளின் எண்ணிக்கை, 2016ஆம் ஆண்டில் 2,272ஆக இருந்தது. ஆனால், வெறும் நான்கு ஆண்டுகளில், அதாவது 2020இல் இது 2,44,834ஆக அதிகரித்துள்ளது.. இந்த தகவலை மத்திய அரசே சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. இப்படி பல்வேறு காரணங்களால் தான் 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து குறைந்துள்ளது.