பஞ்சாபில் பிரதமர் மோடியின் காரை மறித்தது ஏன்? விவசாய சங்க தலைவர் சுர்ஜித் சிங் பூல் பரபர பேட்டி
டெல்லி: பிரதமரின் கார் நேற்று பஞ்சாப் மாநிலத்தில் மறிக்கப்பட்டது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இது குறித்து சுர்ஜித் சிங் பூல் சில முக்கிய தகவல்கள் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்திற்குப் பிரதமர் மோடி பல்வேறு அரசுத் திட்டங்களைத் தொடங்கி வைக்க நேற்று சென்றிருந்தார். இதற்காகப் பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் நிகழ்ச்சி நடக்கும் ஹுசைன்வாலா பகுதிக்குச் செல்ல அவர் திட்டமிட்டிருந்தார்.
முதலில் ஹெலிகாப்டர் மூலமே பிரதமர் மோடி செல்ல திட்டமிட்டிருந்தார். இருப்பினும், மோசமான வானிலை காரணமாக இந்த 20 நிமிட ஹெலிகாப்டர் பயணம் 100 கிலோமீட்டர் கார் பயணமாக மாற்றியமைக்கப்பட்டது.

ஏன் ஆபத்து
பிரதமரின் இந்த கார் பயணம் முதலில் சுமுகமாகவே சென்றது. இருப்பினும், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு வெறும் 10 கிலோமீட்டர் மட்டுமே இருந்த நிலையில், பிற்பகல் 1.30 மணியளவில் மேம்பாலம் ஒன்றில் பிரதமர் மோடியின் காரை விவசாயிகள் மறித்ததாகக் கூறப்படுகிறது. சில போராட்டக்காரர்கள் பிரதமரின் காருக்கு 150 மீட்டர் அருகே வரை வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்கு வெறும் 30 கிலோமீட்டர் தூரத்தில் நடந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. கடந்த காலங்களில் இப்பகுதியில் டிரோன் நடமாட்டம் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திரும்பிய பிரதமர்
இது தொடர்பாக வெளியான வீடியோ மற்றும் ஃபோட்டோக்களில் மேம்பாலம் மீது நிறுத்தப்பட்டிருந்த காரில் பிரதமர் மோடி மாஸ்க் அணிந்தவாறே காத்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. அவரை சுற்றிலும் பாதுகாப்பு வீரர்கள் சூழ்ந்தபடி இருந்தனர். சுமார் 20 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி அப்படியே காரில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் வேறுவழியின்றி பிரதமர் மோடியின் கார் மீண்டும் திரும்பியது. பிரதமரின் பாதுகாப்பு ப்ரோடோகாலில் இது மிகப் பெரிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.

உள் துறை அமைச்சகம்
மத்திய உள் துறை அமைச்சகம் பஞ்சாப் அரசிடம் ஏற்கனவே இது தொடர்பாக விரிவான அறிக்கையைக் கேட்டுள்ளது. இது தொடர்பான வழக்கில் பஞ்சாப் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோரை இடைநீக்கம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார். அதேநேரம் ஒரு பஞ்சாபியாகப் பிரதமர் மோடியைக் காக்க நான் உயிரைக் கூட கொடுத்திருப்பேன். ஆனால், அதுபோல இங்கு எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்பதே உண்மை எனப் பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாப் போலீசார்
முறையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பஞ்சாப் போலீசார் அளித்த உத்தரவாதத்தைத் தாண்டி இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னதாக செவ்வாய்க்கிழமை மாலை தான் இந்தப் பகுதியில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அது புதன்கிழமை காலை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கைவிடப்பட்டது. எனவே, பிரதமர் மோடி கார் மூலம் கிளம்பிய போது, ரூட் கிளியராக உள்ளதாகவே போலீசார் தெரிவித்துள்ளனர்.

திடீரென திரண்ட விவசாயிகள்
ஆனால், நண்பகல் 12 மணியளவில் சுர்ஜித் சிங் பூல் தலைமையிலான பாரதிய கிசான் யூனியன் (கிராந்திகாரி) அமைப்பைச் சேர்ந்த 50 பேர், பியாரெனானா கிராமத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் தர்ணா செய்துள்ளனர். போராட்டம் குறித்த தகவல் கிடைத்ததும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இவர்களுடன் இணைந்து கொண்டனர். பிரதமர் மோடியின் கார் இந்த வழியாக வருவது தெரிந்தும் போலீசார் போராட்டக்காரர்களை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

என்ன காரணம்
இந்நிலையில், தான் பிரதமர் மோடியின் காரை ஏன் மறித்தேன் என்பது குறித்து பாரதிய கிசான் யூனியன் (கிராந்திகாரி) அமைப்பின் சுர்ஜித் சிங் பூல் நியூஸ் 18 செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "பிரதமரை வழிமறிக்க வேண்டும் என்பது எல்லாம் எங்கள் எண்ணம் இல்லை. பஞ்சாப் போலீசார் எங்களை அங்கிருந்து நகரும்படி சொல்லும் வரை, பிரதமர் அந்த வழியாகச் செல்வார் என்பது கூட எங்களுக்குத் தெரியாது. பிரதமர் மோடி கார் மூலம் அந்த வழியில் வருவார் என எங்களுக்கு உண்மையாகவே தெரியாது.

போலீசார் கூறினார்களா
நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, மேம்பாலத்தில் பிரதமரின் கான்வாய் நிற்பதாகக் கிராம மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். உண்மையாகவே பிரதமரின் வாகனத்தை நிறுத்தும் திட்டம் எதுவும் எங்களுக்கு இல்லை. பிரதமர் வருவதால் நாங்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என மதியம் 1 மணி வரை போலீசார் எங்களிடம் வலியுறுத்தினர். இதை எங்களால் நம்ப முடியவில்லை. போலீசார் எங்களிடம் பொய் கூறுவதாகவே நாங்கள் நினைத்தோம். ஏனென்றால் வழக்கமாக, பிரதமர் கான்வாய் செல்லும் இடங்கள் குறைந்தபட்சம் 2-3 மணி நேரத்திற்கு முன்பே கிளயர் செய்யப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications