வீரப்பனை வீழ்த்திய அதிரடிப்படை முதல் டெல்லி போலீஸ் கமிஷனர் வரை.. யார் இந்த சஞ்சய் அரோரா?
டெல்லி: டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக தமிழக கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டில் வீரப்பனை வீழ்த்திய அதிரடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு முதல் அமைச்சர் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி கமிஷனராக இருப்பவர் ராகேஷ் ஆஸ்தானா. இவரை தொடர்ந்து டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று பிறப்பித்துள்ளது. தலைநகர் டெல்லியின் புதிய போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள சஞ்சய் அரோரா தமிழ்நாட்டின் கேடரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இவர் நாளை முதல் டெல்லி போலீஸ் கமிஷனராக செயல்பட உள்ளார்.

நீண்டகாலம் பணியாற்ற வாய்ப்பு
இவருக்கு 2025 ஜூலை 31 வரை பணிக்காலம் உள்ளது. இதனால் இவர் தனது பணியை சிறப்பாக மேற்கொள்ளும் போது நீண்டகாலம் டெல்லியின் போலீஸ் கமிஷனராக செயல்பட வாய்ப்புள்ளது. தற்போதைய நியமனத்தின் மூலம் சஞ்சய் அரோரா AGMUT (அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம்) கேடருக்கு வெளியே இருந்து டெல்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள மூன்றாவது அதிகாரி என்ற பெயரை பெற்றுள்ளார்.

தமிழக கேடர் அதிகாரி
சஞ்சய் அரோரா ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மால்வியா நேஷனல் இன்ஸ்ட்டிடியூட்ல் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் என்ஜினீயரிங் படிப்பை முடித்த சஞ்சய் அரோரா ஐபிஎஸ்ஸாக தேர்வானார். 1988ல் தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். வீரப்பனை பிடிக்கும் சிறப்பு அதிரடி படையில் சூப்பிரண்டாக செயல்பட்டார்.சிறப்பாக செயல்பட்டதாக வீரதீர செயலுக்கான முதல் அமைச்சரின் விருது பெற்றார்.

கோவை, சென்னையில் பணி
கோவை போலீஸ் கமிஷனராக 2002ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை பணியாற்றினார். விழுப்புரம் சரக டிஐஜியாகவும், லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை இயக்குனராகவும் செயல்பட்டார். மேலும் தமிழகத்தின் தலைநகர் சென்னையிலும் பணி செய்த அனுபவம் கொண்டு்ளார். சென்னை மாநகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து பிரிவுகளில் கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றினார். மேலும் ஏடிஜிபி (ஆபரேஷன்), ஏடிஜிபி(நிர்வாகம்) உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தார்.

மத்திய அரசு பணி
தேசிய பாதுகாப்பு பணியில் பயிற்சி பெற்ற பின்னர் 1991ம் ஆண்டு சிறப்பு பாதுகாப்பு படை அமைப்பதில் முக்கிய பங்காற்றினார். மேலும் மத்திய அரசு பணிக்கு சென்ற அவர் 1997 முதல் 2002 வரை இந்தோ திபெத் எல்லை போலீஸ் பிரிவில் உத்தரகாண்ட் ஐடிபிபி பட்டாலியனில் செயல்பட்டார். இந்த பொறுப்பில் 1997 முத்ல 2000 ஆண்டு வரை இருந்தார். அதன்பிறகு பிஎஸ்எப் (ஸ்பெஷல் ஆபரேஷன்) பிரிவில் ஐஜியாகவும், சிஆர்பிஎப்பில் சத்தீஸ்கர் பிரிவு ஐஜியாகவும் செயல்பட்டார். பிறகு தமிழகம் வந்து சிறிது காலம் பணியாற்றி அவர் மீண்டும் மத்திய அரசு பணிக்கு சென்றார்.

ஜனாதிபதி பதக்கம்
கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்டு 31ந்தேதி இந்தோ-திபெத் எல்லை காவல் படையின் டிஜிபியாக பதவியேற்று செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இந்தியாவின் தலைநகர் டெல்லி மாநகர போலீஸ் கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நாளை டெல்லி போலீஸ் கமிஷனராக பொறுப்பு ஏற்க உள்ளார். முன்னதாக இவர் கடந்த 2004ல் சிறந்த சேவைக்கான போலீஸ் பதக்கம், 2014ல் சிறந்த சேவைக்கான ஜனாதிபதியின் போலீஸ் பதக்கம் உள்பட ஐ.நா. அமைதி குழு பதக்கம் உள்பட பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications