இதை எதிர்பார்க்கவே இல்லையே! டைம் தராத பிரதமர் அலுவலகம்.. இருந்தாலும் விடாத திமுக.. இதுதான் நாகரீகம்!
டெல்லி: டெல்லியில் திமுக சார்பாக திறக்கப்பட உள்ள புதிய அலுவலக திறப்பு விழாவிற்கு திமுக தோழமை கட்சிகள் மட்டுமின்றி பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. திமுகவின் இந்த திடீர் மூவ் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தற்போது அபுதாபியில் இருக்கிறார். துபாயில் அரசு நிகழ்வுகளை முடித்துக்கொண்டு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முதல்வர் ஸ்டாலின் அபுதாபி சென்றுள்ளார். இதையடுத்து நாளை சென்னைக்கு திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதன்பின் மார்ச் 31ம் தேதி முதல்வர் ஸ்டாலின் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்கிறார். பின்னர் . டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட திமுக கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

டெல்லி திமுக
இந்த கட்டிடம் ஏப்ரல் 2ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. திமுக கட்சி அலுவலகத்திற்கு 'அண்ணா - கலைஞர்' அறிவாலயம் என்று பெயர் வைத்துள்ளனர். இதன் திறப்பு விழா மிக பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு திமுக எம்பிக்கள் அழைப்பு விடுத்தனர். அதன்பின் திமுகவின் தேசிய அளவிலான தோழமை கட்சி தலைவர்களுக்கு திமுக சார்பாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.

பாஜக திமுக அழைப்பு
இந்த நிகழ்ச்சி எதிர்க்கட்சிகள் சங்கமிக்கும் இடமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு திமுக சார்பாக இதில் நேரில் கடிதம் வழங்கப்பட்டது. அதேபோல் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

பாஜக கூட்டணி
இது போக பாஜக கூட்டணியில் உள்ள மற்ற சில கட்சிகளுக்கும் அழைப்பு சென்றுள்ளது. அதெல்லாம் விட அதிமுகவிற்கு முறையாக கடிதம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக பிரதமர் மோடியை சந்தித்து அழைப்பு விடுக்க திமுக எம்பிக்கள் முயன்று உள்ளனர். ஆனால் பிரதமர் அலுவலகம் இதற்காக நேரம் கொடுக்கவில்லை. ஏற்கனவே மார்ச் 31ம் தேதி முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளதால் இதற்காக தனியாக நேரம் கொடுக்க பிரதமர் அலுவலகம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

மோடி ஸ்டாலின் சந்திப்பு
அதோடு பிரதமர் வேறு சில பணிகளில் பிஸியாக இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் அலுவலகம் இதற்கு நேரம் கொடுக்கவில்லை என்றாலும் முதல்வர் ஸ்டாலின் வரும் 31ம் தேதி சந்திப்பில் பிரதமர் மோடியை இந்த நிகழ்விற்கு அழைக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திமுக நாகரீகம்
திமுகவின் இந்த நிலைப்பாடு அரசியல் கடந்தது என்கிறார்கள். எதிர்க்கட்சிகள் கூட்டம் தனியாக நடக்கும். அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. டெல்லியில் அலுவலகம் திறப்பது என்பது சுப நிகழ்வு. இதில் அரசியல் கடந்து எல்லோரும் கலந்து கொள்வதை திமுக விரும்புகிறது. முறையாக அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. வருபவர்கள் வரட்டும், வரவில்லை என்றாலும் ஓகேதான்.. அழைப்பதுதான் நாகரீகம் என்று கருதி இப்படி பாஜக தலைவர்களுக்கும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications