சீனா, பாகிஸ்தானோடு மோதலாம்.. விவசாயிகளோடு மோதாதீர்கள்.. குலாம் நபி ஆசாத் 'நறுக்'
டெல்லி: சீனாவுடனும் அல்லது பாகிஸ்தானுடன் மோதல் ஏற்பட்டால் மத்திய அரசுக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும், ஆனால் விவசாயிகளுடன் மத்திய அரசு போட்டி போட்டு சண்டை போடக் கூடாது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் இன்று உரையாற்றிய குலாம்நபி ஆசாத் மேலும் கூறியதாவது: விவசாயிகள் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள். காங்கிரசை சேர்ந்தவர்கள் கிடையாது. அவர்கள் இந்த நாட்டுக்கு பொதுவானவர்கள்.
பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் மோதக் கூடிய சூழ்நிலை வரும் போது நாங்கள் மத்திய அரசுக்கு துணையாக இருந்துள்ளோம். ஆனால் இதற்காக விவசாயிகளுடன் மோதும்போது ஆதரவு அளிக்க முடியாது.
சர்ச்சைக்குரிய 3 விவசாய சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். ஜனவரி 26-ஆம் தேதிக்கு போராட்டத்திற்கு பிறகு காணாமல் போனவர்கள் பற்றி கண்டறிவதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும்.
ஜனவரி 26-ஆம் தேதி செங்கோட்டையில் நடைபெற்ற அனைத்து சம்பவங்களுக்கும் நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். யார் யார் இதற்கு காரணமானவர்களோ, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால் அப்பாவிகள் பொய்யான குற்றச்சாட்டுக்கு உள்ளாகி தண்டனைக்கு உள்ளாக கூடாது.
சசிதரூர் முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருந்தவர். உலக நாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்தவர். அவர் எப்படி தேசத்துரோகி ஆவார். அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது தவறானது.
ஜம்மு காஷ்மீர் ஒரு மாநிலமாக இருந்த போது இப்போதைய விடவும் 100 மடங்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக பேணப்பட்டது. வாஜ்பாய் உள்ளிட்ட எந்த ஒரு தலைவரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று எப்போதுமே கூறியது கிடையாது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாவட்ட வளர்ச்சி தேர்தல்களை சிறப்பாக நடத்தியதற்காக மத்திய அரசை பாராட்டுகிறேன். அதேநேரம் இப்போதை விட முன்புதான் ஜம்மு-காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இப்போதை விட 100 மடங்கு சிறப்பான முன்னேற்றம் ஜம்மு-காஷ்மீரில் முன்புதான் இருந்தது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது சுற்றுலா மற்றும் கல்வி இரண்டுமே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. ஜம்மு-காஷ்மீருக்கு இப்போது சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதில்லை. ஜம்மு-காஷ்மீருக்கு அடிக்கடி வருபவர்களும் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் எப்படி அந்த மக்களுடன் கலந்துரையாட முடியும். மக்களுக்கு இதனால் என்ன பயன் உள்ளது.
இணையதள சேவை அவ்வப்போது துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாக கல்வி பாதிக்கப்படுகிறது. 2ஜி அலைவரிசை மட்டுமே கொடுக்கப்படுகிறது. இதை வைத்து மாணவர்கள் எப்படி கல்வி கற்க முடியும்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் உள்ள நிலங்களை யார் வேண்டுமானாலும் வந்து வாங்கலாம், தங்கள் பகுதியில் யார் வேண்டுமானாலும் வேலைக்கு பணியமர்த்தப்பட்டலாம் என்பதை ஏற்கவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. நமது மக்களுக்கு நாம் தான் அன்பை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு நாம் தான் நம்பிக்கையை ஊட்ட வேண்டும். இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.