ஹத்ராஸ்.. செய்தி சேகரிக்கவிடாமல் நிருபர்களை தடுப்பது ஏன்? டெல்லி பத்திரிக்கையாளர் சங்கம் கேள்வி
டெல்லி: ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் குறித்து செய்தி வெளியிட விடாமல் தடுப்பதாக டெல்லி பத்திரிகையாளர்கள் சங்கம் அதிர்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து டெல்லி பத்திரிக்கையாளர் சங்க தலைவர் எஸ்.கே.பாண்டே, பொதுச் செயலாளர் சுஜாதா மதோக், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவரின் குடும்பத்தினர் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களைச் சந்திக்க யாரும் கிராமத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
கேமரா குழுவினரும் நிருபர்களும் கிராமத்திற்கு செல்லும் சாலையில் நிற்க வைக்கப்பட்டுள்ளனர். கிராமத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுத்துள்ளனர்.
எம்.பி.க்கள் டெரெக் ஓ 'பிரையன் மற்றும் ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் பிற தலைவர்கள் கிராமத்திற்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினரால் கடுமையாக இடைமறிக்கப்பட்டனர்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ஆதரவாளர்களுடன் ஹத்ராஸுக்கு நடந்து செல்ல முயன்றபோது தரையில் தள்ளப்பட்டார். பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்துள்ளனர்.
தடயவியல் அறிக்கை, பலாத்காரம் நடக்கவில்லை என கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல் நள்ளிரவு அவசரமாக தகனம் செய்யப்பட்டுள்ளதால் சந்தேகங்களை தீர்க்க இரண்டாவது பிரேத பரிசோதனை செய்ய எஞ்சியிருந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
முழு வழக்கையும் உ.பி. அரசு தவறாகக் கையாள்வது குறித்து கேள்விகளை எழுப்புவோருக்கு எதிராக தணிக்கை செய்வது குறித்து அதிர்ச்சி ஏற்படுகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாமல் அரசாங்கம் எதை மறைக்க விரும்புகிறது, யாரைப் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து கேள்விகள் எழத்தான் செய்யும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.