சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தால் காஷ்மீர் மக்களுக்கு பாதிப்பா? எதிர்ப்பது ஏன்? இதுதான் விஷயம்
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியல் சாசனத்தின் 370வது பிரிவின்கீழ் கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதால், அம்மாநிலத்தில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு சில எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழி செய்தது. 1949ம் ஆண்டு, இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து, தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்தலின் கீழ் 370வது பிரிவு வரையறுக்கப்பட்டது.
சிறப்பு சட்டப்பிரிவு என்பது நிரந்தர குடியுரிமை சட்டம் என்றும் அழைக்கப்பட கூடியது.
பிற பகுதி மக்கள் குடியேற்றம்
காஷ்மீர் மாநில குடிமக்களாக இல்லாதவர்கள் நிரந்தரமாக அந்த மாநிலத்தில் குடியேற முடியாது. அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது, மேலும் அரசு வேலைகளில் பணியாற்ற முடியாது. பிற மாநிலத்தவர்களுக்கு உதவிகளோ, ஸ்காலர்ஷிப்போ கிடைக்காது. இதனால், காஷ்மீர் குடிமக்கள் பெரிய போட்டி ஏதுமின்றி நிம்மதியாக வாழ முடியும் என்பதே சிறப்பு அந்தஸ்து வழங்க நோக்கம். ஆனால் இனி என்னவாகும்? நாட்டின் எந்த பகுதி மக்களும் காஷ்மீரில் குடியேறலாம். தொழில் தொடங்கலாம். இதனால் காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்திற்கு போட்டி வரும். அவர்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் நிலை கூட வரலாம்.
பெண்கள் திருமணம்
சிறப்பு அந்தஸ்தின்கீழ், காஷ்மீரில் குடியுரிமை பெற்ற பெண்கள், நிரந்தர குடியுரிமை அல்லாத ஒருவரை திருமணம் செய்யும்பட்சத்தில், அந்தப் பெண் தனது குடியுரிமையை இழக்க நேரிடும். ஆனால் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம் சில வருடங்கள் முன்பாக இது தொடர்பாக ஒரு தீர்ப்பை வழங்கியது. அதன்படி, காஷ்மீர் பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்தால் ஜம்மு காஷ்மீர் பெண் குடியுரிமையை இழக்க மாட்டார். ஆனால், அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கு காஷ்மீர் குடியுரிமை கோர முடியாது.
தனி அடையாளம்
இப்போது இப்படி எந்த சிக்கலும் இல்லை. காஷ்மீர் பெண்கள் வேறு மாநில ஆண்களை திருமணம் செய்ய முடியும். இது காஷ்மீரிகளுக்கான தனித்த அடையாளத்தை இழக்க வழி வகுக்கும் என்று அம்மாநில மக்களில் கணிசமானோர் அச்சப்படுகிறார்கள்.
தங்கள் சட்டங்கள்
ராணுவம், வெளியுறவு, தகவல் தொடர்பு துறைகள் தவிர, பிற துறைகள் தொடர்பாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இயற்றும் சட்டங்கள், காஷ்மீர் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் இயற்றினால், அந்த சட்டங்கள் இந்த மாநிலத்திற்கு பொருந்தாது என்ற ஷரத்து இருந்தது. அதுவும் இனிமேல் செல்லுபடியாகாது என்பதால், தங்களுக்கு தேவையான சட்டங்களை தாங்களே இயற்றிக்கொள்ளும் வாய்ப்பு பறிபோவதாக காஷ்மீரிலுள்ள கணிசமானோர் நினைக்கிறார்கள்.