கவனமாக இருக்க வேண்டும்.. இலங்கையால் இந்தியாவின் பாதுகாப்பிற்கே ஆபத்து.. பறந்து வரும் வார்னிங்!
டெல்லி: இலங்கையில் நடக்கும் கலவர சூழல் மற்றும் அரசியல், பொருளாதார பிரச்சனைகளால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு சிக்கல் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இலங்கையில் போராட்டத்திற்கு இடையில் நேற்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். அங்கு விலைவாசி கட்டுக்கடங்காத அளவிற்கு உச்சத்தை தொட்டுள்ளது. .
இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. மக்கள் கடுமையாக அங்கு அவதிப்பட்டு வரும் நிலையில் அரசுக்கு எதிரான போராட்டமாக இது உருவெடுத்துள்ளது.
மொழி, மத பெருமை வேண்டாம்! மீறினால் இலங்கை நிலை தான் இந்தியாவுக்கு வரும்: ஜெய்ராம் ரமேஷ் சுளீர்
கலவரம்
இந்த நிலையில் இலங்கையில் போராட்டம் மற்றும் கலவரம் நடக்கும் நிலையில் அந்நாட்டிற்கு இந்தியா ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு இந்தியா ராணுவத்தை அனுப்பி அரசியலமைப்பு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இந்தியாவிற்கு எதிரான அந்நிய சக்திகள் இலங்கை விவகாரத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சுப்பிரமணியன் சாமி
ஆனால் இந்திய உயர் கமிஷன் இதை மறுத்துள்ளது. இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பும் திட்டத்தில் நாங்கள் இல்லை. சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இந்தியா அந்த நிலைப்பாட்டில் இல்லை. இந்தியா இலங்கையின் நிலைத்தன்மை, ஜனநாயகம், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை விரும்புகிறது. இலங்கையின் கொள்கைகளில் இந்தியா நம்பிக்கை கொண்டு இருக்கிறது. இலங்கை மக்கள் ஜனநாயக ரீதியாக வெளிப்படுத்தும் உணர்வுகளை இந்தியா எப்போதும் மதிக்கும், என்று இந்திய உயர் கமிஷன் விளக்கம் கொடுத்துள்ளது.
மறுப்பு
இந்த நிலையில் இலங்கையில் நடக்கும் பிரச்சனைகள் இந்தியாவிற்கு பெரிய பாதிப்புகளை முன்னாள் ராணுவ லெப்டினன்ட் சையது அட்டா ஹாஸ்நெய்ன் நியூஸ் 18 ஆங்கில ஊடகத்தில் நீண்ட கட்டுரை எழுதி உள்ளார். அதில், சீனாவிடம் இருந்து வாங்கப்பட்ட கடன் இலங்கையின் இந்த பொருளாதார நிலைக்கு முக்கிய காரணம் ஆகும். The Hambantota துறைமுகம் மற்றும் Mattala ராஜபக்சே விமான நிலையம் இரண்டும் சீனாவிடம் 2 மில்லியன் டாலர் கடன் வாங்கி கட்டிய நிலையங்கள் ஆகும். இது இரண்டும் பெரிதாக பயன்பாட்டில் இல்லை.
விளக்கம்
இது போக 8 பில்லியன் டாலர் வரை சீனாவிடம் வேறு வகையிலான கடன்களை இலங்கை வாங்கி உள்ளது. இலங்கையின் பொருளாதார சரிவிற்கு இதுவும் காரணம். இது போக இலங்கையில் நடந்த தீவிரவாத தாக்குதல்களும் அந்நாட்டு சுற்றுலா துறையில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. சுற்றுலா துறையை நம்பி இருக்கும் இலங்கை கொரோனாவிற்கு பின் 70 சதவிகித வருமானத்தை இழந்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து கடன் வாங்கிய இலங்கை இப்போது பொருளாதார சரிவில் வீழ்ந்துள்ளது.
எச்சரிக்கை
இலங்கையில் தற்போது நடக்கும் போராட்டங்கள், கலவரங்கள் ஆகியவற்றை தீவிரவாத இயக்கங்கள் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அங்கு நிலவும் அரசின் நிலையற்ற தன்மை ஆகியவற்றை சர்வதேச தீவிரவாத அமைப்புகள் குறி வைக்க வாய்ப்பு உள்ளன. ஏற்கனவே மத, இன ரீதியாக பிளவுபட்டுள்ள இலங்கையில் எளிதாக குறி வைக்க தீவிரவாத இயக்கங்கள் முயலும்.
சர்ச் தாக்குதல்
கடந்த ஏப்ரல் 21, 2019ல் இலங்கையில் நடைபெற்ற சர்ச் தாக்குதல்கள் வெறும் டிரைலர்தான். இப்போது இருக்கும் சூழ்நிலையில் கூடுதல் தாக்குதல்கள் அங்கே நடக்கும் வாய்ப்புகள் உள்ளன. அந்த நாட்டில் எந்த அரசியல் ரீதியான பிரச்சனையும் இல்லாதே போதே இவ்வளவு பெரிய தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இப்போது அந்நாட்டில் அரசியல் குழப்பம் நிலவும் போது தீவிரவாத தாக்குதல்கள் நடக்காது என்பதில் என்ன உறுதி?
ஐஎஸ் அமைப்பு
தென்னிந்தியாவில் உள்ள ஐஎஸ் கிளைகள் மூலம் இலங்கையில் தாக்குதல்கள் நடக்காது என்று எப்படி உறுதியாக சொல்ல முடியும்? இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இது சிக்கலை ஏற்படுத்தும். இலங்கையில் தீவிரவாத அமைப்புகள் வளர்வது இந்தியாவிற்கும் பாதுகாப்பு ரீதியாக பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு இதனால் சில பாதிப்புகள் ஏற்படலாம்.
Recommended Video
எச்சரிக்கை
உதாரணமாக இந்தியா சர்வதேச கடல் வணிகத்திற்கு ஒரு வகையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தையும் நம்பி இருக்கிறது. இந்தியாவின் 6 சதவிகித கடல் வர்த்தகம் கொழும்பு துறைமுகத்தில் இருந்துதான் நடக்கிறது. இவை பாதிப்படையும் அபாயமும் உள்ளது. அதேபோல் இந்தியாவிற்கு வரும் அகதிகள் காரணமாக பொருளாதார ரீதியாகவும், சட்ட ஒழுங்கு ரீதியாகவும் இந்தியாவிற்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இலங்கையில் நடக்கும் விவரங்களை இந்தியா தீவிரமாக கண்காணிக்க வேண்டும், என்று முன்னாள் ராணுவ லெப்டினன்ட் சையது அட்டா ஹாஸ்நெய்ன் தெரிவித்துள்ளார்.