ஆளுநருக்கு உத்தரவிடாமல் உச்சநீதிமன்றமே அறிவித்தது ஏன்? - அதிரடி தீர்ப்புக்கு காரணமான ஆளுநர்!
டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Recommended Video
161வது சட்டப்பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால் உச்சநீதிமன்றமே முடிவெடுக்க வழிவகுக்கும் 142வது பிரிவைப் பயன்படுத்தி பேரறிவாளனை நீதிபதிகள் விடுதலை செய்தனர்.
இந்த வழக்கில், ஆளுநர் மீது கடும் அதிருப்தி அடைந்திருந்த நிலையிலேயே, தாங்களே விடுதலை உத்தரவைப் பிறப்பிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு முடிவுக்கும்
பேரறிவாளன் விடுதலை வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு ஆளுநரின் செயல்பாடு பற்றி உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. ஆளுநர் ஒவ்வொரு கோப்பையும் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்று எங்கு குறிப்பிடப்பட்டுள்ளது? மாநில அரசுகளின் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் எதிராக இருந்தால் அது கூட்டாட்சி அமைப்பில் மிகப்பெரிய பாதகத்தை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆளுநரின் முடிவு
விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் பேரறிவாளனை விடுவிப்பது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் ஆளுனர் என்ன முடிவு எடுத்துள்ளார்? 2,3 ஆண்டுகளாக ஆளுநரிடம் இருக்கிறது. விரைவில் ஆளுநர் முடிவு எடுப்பார் என்று கடந்த முறை கூறிய நிலையில் ஆளுநரின் முடிவு என்ன ஆனது? என கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு
ஆளுநர் என்பவர் மாநில அரசின் தலைவர். அப்படி இருக்கும்போது அவருக்காக மத்திய அரசு ஆஜராவது ஏன்? ஆளுநர் உயர் பதவி வகிப்பதால் நாங்கள் கூடுதலாக எதுவும் கூற விரும்பவில்லை. எல்லா குற்றங்களுக்கும் கருணை மனு மீது குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க முடியும் என்பது போல் மத்திய அரசின் வாதம் உள்ளது.
14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவிப்பவர்களை அரசியல் சாசன சட்டம் 72ன் படி குடியரசுத் தலைவரும், 161ன் படி ஆளுநரும் விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ஆளுநர் ஏன் முடிவு எடுக்க முடியாது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஆளுநர் கால தாமதம்
மேலும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், "ஆளுநர் காலதாமதம் செய்ததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கிறது. அரசியல் சாசனப் பிரிவு 161ன் படி மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் செயல்படுத்தவில்லை. ஆளுநர் காலதாமதம் செய்தது தவறு. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைத்தது அரசியலமைப்புச் சட்டப்படி தவறு. ஆளுநர் செயல்படாத விவகாரம் நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டது எனத் தெரிவித்துள்ளது.

யாருக்கும் அதிகாரம் இல்லை
மேலும், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் மத்திய அரசின் கருத்தை பெறத் தேவையில்லை. முழுமையாக ஆராய்ந்த பிறகே பேரறிவாளனை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியது. மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை.
பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை. பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆளுநரின் தாமதமே காரணம்
இந்த வழக்கில், ஆளுநர் விடுதலை செய்யவே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கக்கூடும். ஆனால், ஆளுநரின் கால தாமதத்தால் கடுமையாக அதிருப்தி அடைந்ததன் காரணமாகவே, ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்காமல், உச்சநீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.
இதன்மூலம், இது தொடர்பான வழக்குகளிலும் உச்சநீதிமன்றத்தின் இந்த விடுதலை தீர்ப்பு முன்னுதாரணமாக காட்டப்படும் நிலையும் உருவாகியுள்ளது. ஆளுநருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தால் ஆளுநர் முடிவு எடுப்பதே முன்னுதாரணமாகியிருக்கும். ஒருவகையில், பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றமே விடுதலை அளித்துள்ள அதிரடி தீர்ப்புக்கு ஆளுநரே காரணமாகியுள்ளார்.












Click it and Unblock the Notifications