பட்ஜெட் இருக்கட்டும்.. நிதியமைச்சர் “ஹல்வா” கொடுப்பது ஏன் தெரியுமா? வியப்படைய வைக்கும் பாரம்பரியம்
டெல்லி: 2023 - 2024 நிதியாண்டின் முழு நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவிக்க இருக்கும் நிலையில் அதில் இடம்பெறப்போகும் திட்டங்கள் குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். அதே நேரம் பட்ஜெட் தாக்கலின்போது ஆண்டுதோறும் நிதியமைச்சர் ஹல்வா செய்து கொடுப்பது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. அதுகுறித்து தற்போது பார்ப்போம்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று கூடியது. இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
மக்களவை தேர்தல் அடுத்து நடைபெற உள்ள சூழலில், மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட் இதுவாகும். எனவே இயல்பாகவே மற்ற பட்ஜெட்டுகளை காட்டிலும் இந்த பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது.

பாரம்பரிய மரபுகள்
அதே நேரம் பட்ஜெட் சமயத்தில் பின்பற்றப்படும் இந்திய அரசின் பாரம்பரிய மரபுகள் குறித்த பேச்சுக்களும் எழுகின்றன. அதில் முக்கியத்துவம் பெறுவது நிதியமைச்சர் சமைக்கும் அல்வாதான். பொதுவாகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அதில் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாவிட்டால் அல்வா கொடுத்துவிட்டார்கள் என்று எதிர்கட்சிகள் விமர்சிப்பதை ஆண்டுதோறும் கேட்க முடியும்.

அல்வா கிண்டும் நிகழ்ச்சி
2023 ஆம் ஆண்டின் பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் மத்திய நிதியமைச்சகம் கடந்த சில மாதங்களாகவே ஈடுபட்டு வந்தது. இதன் பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி 26 ஆம் தேதி மத்திய நிதியமைச்சகத்தின் வடக்கு கட்டிடத்தில் பாரம்பரிய முறைப்படி அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பாரம்பரிய மரபு
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெரிய பாத்திரத்தில் அல்வாவை கிண்டி அதிகாரிகளுக்கு வழங்கினார். அப்போது நிதியமைச்சர் அல்வா சாப்பிடும்போது கொடுத்த ரியாக்சன் படங்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டன. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் முடிந்த பிறகு அல்வா கிண்டும் பணி பாரம்பரிய மரபாக பார்க்கப்படுகிறது.

அல்வா கிண்டுவது ஏன்?
பட்ஜெட் தயாரிப்பதற்காக பணியாற்றும் நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டுவதற்காக இவ்வாறு அல்வா செய்து தரப்படுகிறது. அதாவது பட்ஜெட் தயாரிப்பு பணியில் நேரடியாக ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நார்த் பிளாக்கில் தங்கி இருந்து அதற்கான முன் ஏற்பாடு பணிகளில் ஈடுபடுவார்கள்.

ரகசியங்களை கசியவிடாமல் தவிர்ப்பது
பட்ஜெட் தயாரிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை அதன் ரகசியங்களை வெளியில் சொல்லாமல் இருக்க குடும்பத்தினர், நண்பர்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்காக இவ்வாறு தங்க வைக்கப்படுகிறார்கள். நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து முடிக்கும் வரை அவர்கள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

காகிதமில்லா பட்ஜெட்
கடந்த 2021 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின்போது காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக நகல் அச்சிடும் பணிகள் தவிர்க்கப்பட்டன. இதனால் நிதியமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நார்த் பிளாக்கில் தங்கி இருக்கும் காலம் குறைந்தது. முன்பு இந்த ஆச்சிடும் பணி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிலையில், 2021 வரை நார்த் பிளாக்கில் உள்ள அரசு அச்சகத்தில் அச்சிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications