கமல் மாதிரியான கலைப் படம் காங்கிரஸுக்கு சரிவராது.. ரஜினி மாதிரியான ஆக்ஷன்தான் லாயக்கு!
Recommended Video
டெல்லி: அமித் ஷா மாதிரியான ஒருவரை காங்கிரஸுக்கு தலைவராக நியமிக்க வேண்டிய கடும் நெருக்கடியில் உள்ளது அக்கட்சி. ஆனால் 90 வயதான மோதிலால் வோராவை தற்காலிக தலைவராக்க அது முடிவு செய்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்து விட்டது பாஜகவின் பிரமாண்ட வெற்றி. இதுவரை இல்லாத அளவிலான சரிவை அது காங்கிரஸுக்கு ஏற்படுத்தி விட்டது. அதை விட முக்கியமாக, காங்கிரஸின் நம்பிக்கையை அது சீர்குலைத்து விட்டது.
ராகுல் காந்தி என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை காலி செய்து விட்டது அமித் ஷா தலைமையிலான பாஜக. இப்படி இருக்கும்போது காங்கிரஸை சீரமைக்க, தூக்கி நிறுத்த அதிரடியான தலைமை அக்கட்சிக்குத் தேவைப்படுகிறது. ஆனால் மோதிலால் வோராவை தலைவராக்கப் போவதாக வெளியாகும் செய்திகள் ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது.
ராஜீவ் காந்தி
இந்திரா காந்தி மறைவுக்குப் பின்னர் கட்சித் தலைமைப் பதவி யாருக்கு என்ற விவாதம் வெடித்தபோது பலரும் பிரணாப் முகர்ஜியை எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடியாக ராஜீவ் காந்தி தலைவரானார். நல்ல துடிப்பான இளம் தலைவரான ராஜீவ் காந்தி, இந்திரா காந்தி விட்டுச் சென்ற பணியை செம்மையாக தொடர்ந்தார். காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை பாதுகாத்தார்.
சோனியா காந்தி
ராஜீவ் காந்திக்குப் பிறகு நரசிம்மராவ், சீதாராம் கேசரி என தலைவர்கள் வந்தனர். ஆனால் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து சோனியா காந்தி தலைவரானார். சோனியா காலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டது. அடுத்தடுத்து 2 முறை ஆட்சியைப் பிடித்தது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசை மிகச் சிறப்பாக வழி நடத்திச் சென்றார் சோனியா காந்தி.
ராகுல் காந்தி
சோனியா காந்தியின் உடல் நலிவால் தலைவர் பதவி ராகுல் காந்தி வசம் போனது. ராகுல் காந்தியின் செயல்பாடுகள் ஆரம்ப காலத்தில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆனால் மோடி ஆட்சியின் கடைசிக்கட்டத்தில்தான் அவருக்கு ஒரு பிடிப்பு கிடைத்தது. படு வேகமாக முன்னேறினார். ஆனால் அது தேர்தலில் லாபமாக மாறவில்லை. மாறாக, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெற்றியை பாஜக பெற்று விட்டது.
பிரமாண்ட தோல்வி
இந்தத் தோல்வியை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கவில்லை, ராகுல் காந்தியும் எதிர்பார்க்கவில்லை. அதை விட அதிர்ச்சி, அமேதியை ராகுல் காந்தி இழந்ததுதான். இதை காங்கிரஸாரால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த நிலையில்தான் தனது பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. தற்போது தலைவர் பதவிக்கு வலுவான ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டிய கடும் சிக்கலில் உள்ளது காங்கிரஸ். பாஜகவுக்கு எத்தனையோ தலைவர்கள் இருந்தபோதும் அமித் ஷா காலத்தில்தான் அக்கட்சி பிரமாண்ட வளர்ச்சி பெற்றது. நாடு முழுவதும் பாஜக வலுவடைய அமித் ஷாவின் திறமையான தலைமைப் பண்புதான் முக்கியக் காரணம்.
கால விரயம் சரிவராது
காங்கிரஸ் கட்சிக்கும் கிட்டத்தட்ட தற்போது அமித் ஷா போன்ற தலைமைதான் தேவைப்படுகிறது. ராகுல் காந்திக்கு சற்று ஓய்வு கொடுப்பதிலும் கூட தவறே இல்லை. அதேசமயம், அதிரடியாக காங்கிரஸை தூக்கி நிறுத்தக் கூடிய வல்லமை படைத்த தலைமைதான் காங்கிரஸைக் காப்பாற்ற கை கொடுக்கும். ஆனால் இடைக்கால தலைவராக மோதிலால் வோராவை காங்கிரஸ் முடிவு செய்திருப்பது ஆச்சரியம் தருகிறது. இடைக்காலத் தலைவர்தான் என்றாலும் கூட இந்த இடைக்காலத்தையும் கூட காங்கிரஸ் கட்சி வீணடிக்காமல் படு வேகமாக செயல்பட்டாக வேண்டிய கட்டாயத்தில் அக்கட்சி உள்ளது.
வோரா சரிவராது
எனவே மிகவும் வயதான வோராவை இடைக்காலத் தலைவராக்குவதற்குப் பதில் துடிப்பான இளம் தலைவரே இடைக்காலத் தலைவராகவோ அல்லது நிரந்தரத் தலைவராகவோ நியமித்து கட்சியை வேகமாக பலப்படுத்தி எதிர் வரும் தேர்தல்களிலேயே காங்கிரஸின் எழுச்சியை மக்களிடம் காட்டினால் மட்டுமே தேசிய அளவில் அது காங்கிரஸுக்கு பலன்தரும். காங்கிரஸை விட்டு பிரிந்து சென்ற தலைவர்கள், பிற கட்சிகளை ஈர்க்கவும் உதவும். அப்படி இல்லாமல் வோராவை வைத்து நிதானமாக காய்களை நகர்த்தினால் அது காங்கிரஸின் எழுச்சியை மேலும் தாமதமாக்கவே செய்யும்.
தற்போதைய சூழ்நிலையில் கமல் மாதிரியான கலைப் படம் காங்கிரஸுக்கு சரிவராது.. ரஜினி மாதிரியான ஆக்ஷன் படம்தான் லாயக்கு.. சிந்திக்குமா காங்கிரஸ்.