புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாருக்கு ஜாமீன் கிடைக்குமா? மனுவை இன்று விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் இருவரும் முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடியான நிலையில், இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய், கடந்த மாதம் 13 ஆம் தேதி திருச்சியில் தனது பிரசார பயணத்தை தொடங்கினார். வாரம் தோறும் சனிக்கிழமைகளில் விஜய் தனது பேருந்தில் பிரசாரம் செய்து வந்தார். அந்த வகையில் கடந்த 27-ந்தேதி நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

41 பேர் பலி
அப்போது கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கரூர் மாவட்ட த.வெ.க செயலாளர் மதியழகன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
தலைமறைவான புஸ்ஸி ஆனந்த்
அதேபோல, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் மீதும் வழக்கு போடப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக இருவரும் தலைமறைவாக உள்ளனர். ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ள நிலையில், 2 பேர் தரப்பிலும் முன் ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒருவாரத்திற்கு மேல் ஆகியும் இருவரும் எங்கு உள்ளனர் என்பது தெரியாத நிலை உள்ளது.
இன்று விசாரணைக்கு வருகிறது
இதற்கிடையே, தங்களுக்கு ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடுகிறார்.












Click it and Unblock the Notifications