மாடலிங் பெண் முடியை ஒட்ட வெட்டியதற்கு ரூ.2 கோடி நஷ்ட ஈடு.. நுகர்வோர் ஆணையம் அதிரடி தீர்ப்பு
டெல்லி: தவறுதலாக பெண்ணின் முடியை வெட்டியதற்காக ஐடிசி மவுரியா ஹோட்டல் நிர்வாகத்திற்கு 2 கோடி அபராதம் விதித்துள்ளது தேசிய நுகர்வோர் தீர்வு ஆணையம்.
நுகர்வோர் ஆணையத்தில் தொடரப்படும் வழக்குகள் பலவும் வித்தியாசமானவை. அப்படியான ஒரு வழக்குதான் இதுவாகும்.
2018 ஆம் ஆண்டில் ஹோட்டல் ஐடிசி மவுரியாவில் பெண் வாடிக்கையாளர் ஒருவருக்கு தவறாக முடியை ஒட்ட வெட்டியது தொடர்பாக நடைபெற்ற வழக்கில், அந்த பெண் வாடிக்கையாளருக்கு தேசிய நுகர்வோர் தீர்வு ஆணையம் ரூ .2 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

உத்தரவில் கூறியிருப்பது
நீதிபதி ஆர்.கே.அகர்வால் மற்றும் டாக்டர் எஸ்.எம்.கண்டிகர் ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது,
"பெண்கள் தங்கள் கூந்தலைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை" மற்றும் "முடியை நல்ல நிலையில் வைத்திருக்க அவர்கள் ஒரு பெரிய தொகையை செலவிடுகிறார்கள்". "அவர்கள் கூந்தலுடன் உணர்வுபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளனர். புகார்தாரர் தனது நீண்ட கூந்தல் காரணமாக முடி தொடர்பான வணிக தயாரிப்புகளுக்கு ஒரு மாடலாக இருந்தார். VLCC மற்றும் Pantene நிறுவனங்களுக்கு மாடலிங் செய்துள்ளார். ஆனால் ஐடிசி ஹோட்டல்ஸ் லிமிடெட் அவருடைய அறிவுறுத்தல்களுக்கு மாறாக முடி வெட்டியுள்ளது. எனவே, எதிர்பார்த்த பணி வாய்ப்புகளை இழந்து பெரும் இழப்பைச் சந்தித்துள்ளார். அது அவருடைய வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றி, ஒரு சிறந்த மாடலாகும் கனவை சிதைத்து விட்டது" என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் பதிவு செய்துள்ளனர்.

சம்பவ பிளாஷ் பேக்
சம்பவ விவரம் இதுதான்- 2018ம் ஆண்டு ஏப்ரல் 12ம் தேதி அன்று, ஹோட்டல் ஐடிசி மவுரியாவில் உள்ள சலூனுக்கு முடி வெட்டுவதற்காக அந்த பெண் மாடல் வருகை தந்தார். அந்த பெண் தனது வழக்கமான முடி ஒப்பனையாளரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்டார். அவர் இல்லை. எனவே அதற்கு பதிலாக ஊழியர்கள் உத்தரவாதத்தின் பேரில் மற்றொரு சிகையலங்கார நிபுணரிடம் மாடல் அனுப்பப்பட்டார்.

நீள முடி போச்சு
முடி அலங்காரம் செய்யும்போது, முன்னும் பின்னும் முகத்தை மறைக்கும் நீளமான ஃப்ளிக்ஸ்/லேயர்கள் மற்றும் கீழே இருந்து 4 இன்ச் நேராக முடியை டிரிம் செய்ய வேண்டும் என்று, மாடலிங் பெண் அறிவுறுத்தியிருந்தார். ஆனாலும் சிகையலங்கார நிபுணர் அவருடைய முழு முடியையும் வெட்டினார். தோளில் இருந்து மேலே, 4 அங்குலத்தை மட்டும் விட்டு விட்டு மற்ற மொத்த முடியையும் அவர் வெட்டியிருந்தார்.

முடி டேமேஜ்
மேலும் இலவச முடி சிகிச்சையையும் வழங்கியுள்ளார்கள். இதன்பிறகு மாடலிங் பெண் முடி சேதமடையத் தொடங்கியது. அவரது உச்சந்தலை எரிச்சல் உணர்வோடு காணப்பட்டது. உச்சந்தலையில் அரிப்பு மற்றும் உரிதல் இருந்தது. முடி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் ரசாயனம் அவரது உச்சந்தலையில் நிரந்தர சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விவரங்களை நுகர்வோர் ஆணையத்திடம் அந்த பெண் பதிவு செய்தார்.

முடியால்தான் வருவாய் கிடைத்தது
மாடலிங் பெண் ஒரு மூத்த மேலாண்மை நிபுணராகவும், நல்ல வருமானம் ஈட்டுபவராகவும் இருந்தார். ஆனால், அலட்சியமாக தலைமுடியை வெட்டியதால், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார். வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இறுதியாக வேலையை இழந்தார். எனவே 2 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications