டொமினிகாவில் சோக்ஷியுடன் சுற்றுலா சென்றவர் காதலி இல்லையாம்.. கடத்திய போலீஸ் குழுவாம்!
டெல்லி: டொமினிகா நாட்டில் காதலியுடன் இன்பச் சுற்றுலா சென்ற போது மெகுல் சோக்ஷி கைது செய்யப்பட்ட நிலையில் அந்த பெண் அவரது காதலி அல்ல என்றும் போலீஸ் குழுவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.
பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13500 கோடிக்கு மேல் மோசடியாக கடன் பெற்று ஏமாற்றி உள்ளனர். இந்த உண்மை வங்கிக்கு தெரிய தொடங்கிய உடன் இருவரும் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டனர். நீரவ் மோடி இங்கிலாந்தின் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.
மெகுல் சோக்ஷியோ ஆன்டிகுவா நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த நிலையில் அவர் ஆன்டிகுவாவில் இருப்பது தெரியவந்தது.
காதலியுடன் ரொமாண்டிக் சுற்றுலா போன மெகுல் சோக்சி.. அடித்து துவைத்து தூக்கி சென்ற டொமினிகா!
கைது
இதையடுத்து இன்டர்போல் போலீஸ் மூலம் அவரை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த நிலையில் ஆன்டிகுவாவில் அவரை காணவில்லை என அவரது வழக்கறிஞர் கூறியிருந்தார். ஆன்டிகுவா போலீஸ் நடத்திய விசாரணையில் சோக்ஷியை ஆன்டிகுவாவின் ஜாலி துறைமுகத்திலிருந்து டொமினிகாவுக்கு அந்நாட்டு போலீஸார் கடத்தி சென்றது தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி டொமினிகா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் சோக்ஷி சிறையில் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் வெளியானது. அந்த புகைப்படத்தில் அவர் கண்கள் வீங்கியும் சிவந்தும், கையில் ரத்தக் கட்டும் இருந்தது. இதனால் அவரை ஆன்டிகுவா சிறைக்கு மாற்ற அவரது வழக்கறிஞர் முயற்சித்து வருகிறார்.
காதலியுடன் சுற்றுலா
இந்த நிலையில் டொமினிகாவை ஒட்டியுள்ள கரீபியன் கடற்கரைக்கு ஒரு காதலியுடன் சோக்ஷி சுற்றுலா போனதாகவும் அனுமதியின்றி வந்ததற்காக அவரை டொமினிகா நாட்டு போலீஸார் அடித்து இழுத்து சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோக்ஷி
அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த தேவையான ஆவணங்களை இந்திய அரசு ஒப்படைத்துள்ளது. இந்த நிலையில் சோக்ஷியுடன் ஜாலியாக சுற்றுலா சென்ற பெண் அவரது காதலி அல்ல என்றும் கடத்தி சென்ற டொமினிகா போலீஸ் குழுவை சேர்ந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பார்ப்பதற்கு சிவாஜி நடித்த புதிய பறவை படம் போல் உள்ளது. அதில் சவுகார் ஜானகியை கொன்ற சிவாஜியை கைது செய்ய போலீஸான சரோஜாதேவி காதலி வேடம் அணிந்திருப்பார்.