ஜனாதிபதி மாளிகையில் ரப்பர் ஸ்டாம்பாக ஒருவர் இருந்தால் அது பேரழிவு! யஷ்வந்த் சின்ஹா பரபர பேட்டி
டெல்லி: ‛‛ஜனாதிபதி மாளிகையில் ரப்பர் ஸ்டாம்ப் ஆக ஒருவர் இருந்தால் அது பேரழிவை தரும். இந்த பதவிக்கு ரப்பர் ஸ்டாம்பாக இருக்கும் நபரை விட திறமையான நபர் வேண்டும். நான் ஒருபோதும் ரப்பர் ஸ்டாம்ப் ஆக இருக்கமாட்டேன்'' என எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்கு வருகிறது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம்(ஜூலை) 18 ம் தேதி நடைபெற உள்ளது.
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். இவர் அமைச்சர், ஆளுநராக இருந்த அனுபவம் கொண்டவர்.
எதிர்க்கட்சிகளுக்கு “ஷாக்” கொடுத்த மாயாவதி.. பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளருக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு
யஷ்வவந்த் சின்ஹா போட்டி
திரெளபதி முர்முவை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டார். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது மத்திய அமைச்சராக இருந்தார். தற்போது இவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எதேச்சதிகார கொள்கைக்கு எதிர்ப்ப
தற்போது நடைபெறும் தேர்தலை வெறும் இந்திய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தலாக கருத வேண்டாம். ஏனென்றால் இந்த தேர்தல் அதைவிட மேலானது. இந்தத் தேர்தல் அரசின் எதேச்சதிகார கொள்கைகளை எதிர்ப்பதற்கான ஒரு படியாகும். இந்த கொள்கைகளுக்கு எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதை நிரூபிக்க வேண்டிய தேர்தல்.
ஒட்டுமொத்த சமுகத்தையும் உயர்த்தாது
எனது அனுபவத்தின் அடிப்படையில் நான் ஒன்றை கூற முடியும். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த நபரின் உயர்வு என்பது அவர் சார்ந்த் ஒட்டுமொத்த சமுகத்தையும் உயர்த்தாது. ஒட்டுமொத்த சமுகத்தின் உயர்வு என்பது அரசு பின்பற்றும் கொள்கைகளை பொறுத்து தான் இருக்கும். பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக நிறுத்தி இருப்பது என்பது ஒரு அரசியல் செயல் தான்.
ஜனநாயக அச்சுறுத்தல்
தற்போது நமது ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அனைத்து அமைப்புகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் இது அச்சுறுத்தலாக உள்ளது. இதனால் இந்தியாவை காக்க அனைவரும் எழுந்து வர வேண்டும்.
ரப்பர் ஸ்டாம் நபர் வேண்டாம்
நமது நாட்டின் அரசியல் இன்று பல பலவீனங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீதிக்கு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஜனநாயக நாட்டில் இப்படி ஒரு நிலை வரக்கூடாது. ராஷ்டிரபதி பவனுக்கு(ஜனாதிபதி மாளிகை) ரப்பர் ஸ்டாம்பாக இருப்பவரை விட திறமையான நபர் வேண்டும். இதற்கு முன்பு இதுபோன்ற ஜனாதிபதிகள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே ராஷ்டிரபதி பவனுக்கு இன்னொரு முறை ரப்பர் ஸ்டாம்ப் நபர் இருந்தால் அது ஒரு பேரழிவாக இருக்கும்'' என்றார்.
மகன் ஆதரவு இல்லையே என கேள்வி
மேலும், யஷ்வந்த் சின்ஹாவின் மகன் ஜெயந்த் சின்ஹா பாஜகவின் எம்பியாக உள்ளார். இந்நிலையில் மகன் ஆதரவு வழங்காதது பற்றி யஷ்வந்த் சின்ஹாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு யஷ்வந்த் சின்ஹா, ‛‛இந்த விஷயத்தில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தர்மசங்கடம் எதுவும் நேரவில்லை. அவர் தனது ‛ராஜ் தர்மத்தை' பின்பற்றுகிறார். நான் எனது 'ராஷ்டிர தர்மத்தை' பின்பற்றுவேன்'' என்றார்.