கொடுத்து வைத்தவர்கள்.. இடைத்தேர்தலுக்குள் ஈரோடு மக்கள் லட்சாதிபதியாகிவிடுவர்.. பாமக அன்புமணி தாக்கு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவதற்குள் அந்த தொகுதி மக்கள் லட்சாதிபதியாகிவிடுவார்கள் என அன்புமணி ராமதாஸ் விமர்சனம்.
தருமபுரி: ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள், இடைத்தேர்தல் முடிவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் இரு சக்கர வாகனங்களை வாங்கி விடுவார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார்.
சட்டசபை உறுப்பினர் ஜி.கே.மணி இல்லத்தில் செய்தியாளர்களை அன்புமணி சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தருமபுரி மாவட்டத்தில் நீண்ட கால பிரச்சினைகள் பல உள்ளன. அதில் முக்கியமானது குடிநீர் பிரச்சினையும் வேளாண் பிரச்சினையும்தான்.
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படமா.. எதுவானாலும் இந்திய சட்டப்படி இருக்கனும் - அன்புமணி அட்வைஸ்
தீர்வு தேட வேண்டாம்
இதற்கு தீர்வு தேடத்தேவையில்லை. அருகிலேயே இருக்கிறது. ஒட்டுமொத்த மாவட்ட மக்களுடைய கோரிக்கை ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் பல முறை போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதை வலியுறுத்தி பாமகவும் நடைப்பயணத்தை நடத்தியுள்ளது.
மக்களை திரட்டி போராட்டம்
அது போல் மக்களை திரட்டி போராட்டம் நடத்தி கையெழுத்து இயக்கம் நடத்தி அதில் 10 லட்சம் கையெழுத்துகளை பெற்று அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியிருந்தோம். இன்றைய முதல்வர் ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதாக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளார்.
20 மாத காலம்
20 மாத ஆட்சி காலத்தில் அது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திட்டம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக ஏதோ கடமைக்கு சொல்கிறார். இந்த திட்டத்தை நிறைவேற்றக் கோரி பாமக சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும். தருமபுரி, மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நில அளவை பணிகள் முடிந்தன.
ரயில்வே உயரதிகாரிகள்
இதுகுறித்து ரயில்வே உயரதிகாரிகளை சந்தித்து ரயில் பாதை அமைப்பது குறித்து கோரிக்கையை வைத்துள்ளோம். மத்திய பட்ஜெட்டில் தருமபுரி ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவோம். சின்னாறு பகுதியில் இருந்து தருமபுரி வரும் வரத்து கால்வாயை அரசு தூர்வார வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த சில மாதங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஒன்று சேர்ந்து கால்வாயை தூர்வாரும் பணியை செய்வார்கள். இந்த பணியில் நானும் ஈடுபடுவேன்.
தொப்பூர் கணவாய் சாலை
தொப்பூர் கணவாய் சாலையை சீரமைக்கக் கோரி சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். இந்த சாலை பிரச்சினை தருமபுரி பிரச்சினை மட்டும் அல்ல , இது இந்தியாவின் பிரச்சினையாகும். பூரண மதுவிலக்கு குறித்து எங்களுக்கு திமுகவின் கொள்கை என்ன என்பதை விளக்க வேண்டும். மது சார்ந்த கொள்கை என்ன, பூரண மதுவிலக்கு கொண்டு வருவீர்களா, படிப்படியாக கொண்டு வருவீர்களா, முழுமையாக கொண்டு வருவீர்களா, இல்லை கொண்டு வரவே மாட்டீர்களா என்பதை இந்த அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
அண்ணாவின் கொள்கை
திமுகவின் நிறுவனர் அண்ணாவின் கொள்கையை நடைமுறைப்படுத்துங்கள். மதுவை ஒழிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கணிசமாக மதுக்கடையை மூடினார்கள். இதற்கு பாமகதான் காரணம். இடைத்தேர்தல் மீது பாமகவிற்க நம்பிக்கை இல்லை. கடைசியாக பாமக சந்தித்த இடைத்தேர்தல் பென்னாகரம். அதன் பின்னர் 13 ஆண்டுகளாக பாமக எந்த இடைத்தேர்தலிலும் பங்கேற்கவில்லை.
கொள்கை முடிவு
எங்கள் கொள்கை முடிவு இடைத்தேர்தல் அவசியம் அற்றது. மெஜாரிட்டியை நிரூபிக்கும் தேவையிருந்தால் மட்டுமே இடைத்தேர்தல் அவசியம். இடைத்தேர்தலால் நேரம், பொருள், நிர்வாகம் அனைத்துமே வீணாகிவிடுகிறது. தமிழகத்தின் நிர்வாகமே ஸ்தம்பிக்கும். இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இடைத்தேர்தல் முடிவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் இரு சக்கர வாகனங்களை வாங்கிவிடுவார்கள். பாமகவின் நிலைப்பாடு நாங்கள் போட்டியிட மாட்டோம். யாருக்கும் ஆதரவும் கிடையாது. இடைத்தேர்தலில் ஒவ்வொரு குடும்பமும் லட்சாதிபதி ஆகிவிடுவார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் பைக் வாங்கிவிடுவார்கள். இடைத்தேர்தல் என்றால் திருமங்கலம் ஃபார்முலா பெருக்கல் 10. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.