தருமபுரியில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது... கையும் களவுமாக பிடித்த போலீஸ்
தருமபுரி: தருமபுரியில் கோட்ட வன அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
Recommended Video
தந்தையின் ஓய்வூதிய பலன்கள் கிடைக்க மகள் பெயருக்கு மாற்றித் தர சமூககாடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன இளநிலை உதவியாளர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
3 வேளாண் சட்டங்கள் ரத்து.. மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர்
இளநிலை உதவியாளர் கேட்ட 34 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க விரும்பாத பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரில் அவர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பெற்றோரை இழந்த பெண்
தருமபுரி நகரம் சாலை விநாயகர் கோயில் தெருவில் வசித்து வந்தவர் சின்னசாமி. இவர் வனத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு சின்னசாமி காலமாகிவிட்டார். பின்னர் அந்த ஓய்வூதியத் தொகையை மனைவி சென்னம்மாள் பெற்று தன்னுடைய மகள் சாந்தியுடன் வாழ்ந்து வந்தார். சாந்திக்கு திருமணம் ஆகவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 2019ம் ஆண்டு சின்னசாமியின் மனைவியும், சாந்தியின் தாயுமான சென்னம்மாள் இறந்துவிட்டார். தந்தை மற்றும் தாயை இழந்த சாந்தி திருமணமும் ஆகாத நிலையில் வாழ்வாதாரமின்றி தவித்து வந்தார்.
ஓய்வூதியம் கோரி விண்ணப்பம்
இந்நிலையில் உறவினர் முருகன் என்பவரின் ஆலோசனைப்படி தந்தையின் ஓய்வூதிய பலனை தனக்கு வழங்கவேண்டும் என தருமபுரி சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தாய் மற்றும் தந்தை இல்லாததால் ஓய்வூதிய பலனை பெறுவதற்கு தன்னுடைய பெயருக்கு மாற்றித் தரவேண்டும் என கோரியிருந்தார். மேலும் ஏற்கனவே 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஓய்வூதிய பணத்தை வழங்கவும் கோரியிருந்தார்.
கையூட்டு கேட்ட என்ஜீனியர்
இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த தருமபுரி சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலக இளநிலை உதவியாளர் பழனிசாமி மனுவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்ப 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வறுமை நிலையில் இருந்த சாந்தி மற்றும் அவரது உறவினர் முருகன் லஞ்சம் கொடுக்க விரும்பவில்லை. தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை தருவதற்கு பழனிசாமி லஞ்சம் கேட்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையிடம், முருகன் மற்றும் சாந்தி முறையிட்டு புகார் அளித்தனர்.
போலீஸ் வலையில் விழுந்தார்
புகாரை ஏற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் சமூகக் காடுகள் மற்றும் விரிவாக்க கோட்ட வன அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர் ரசாயனம் தடவிய பணம் 34 ஆயிரம் ரூபாயை முருகனிடம் தந்து அதை பழனிசாமியிடம் தருமாறு அறிவுறுத்தினர். முருகன் பணம் தர அதை சந்தோஷமாக பழனிசாமி வாங்கிக்கொண்டு எண்ண ஆரம்பித்தார். உடனே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்திற்குள் நுழைந்து பழனிசாமியை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடம் இருந்த ரசாயனம் கலந்த பணத்தை பறிமுதல் செய்து 4 மணிநேரம் விசாரணை மேற்கெண்டனர். விசாரணையில் முருகனிடம் லஞ்சம் கேட்டதை பழனிசாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து இளநிலை உதவியாளர் பழனிசாமி கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.