நீட் தேர்வுக்கு படிக்க செல்போன் கொடுத்த தந்தை.. ஆன்லைன் கேமில் பணத்தை இழந்து தற்கொலை செய்த மகன்
தருமபுரி: நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் ஆன்லைன் கேமில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் வெங்கடேஷ் (வயது 20).
பிளஸ் 2 படித்துள்ள இவர் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற கனவுடன் மூன்று வருடங்களாக நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார்.
நீட் பிஜி ஒத்திவைக்கப்படுமா? நெருக்கும் இந்திய மருத்துவர் சங்கம் - மத்திய அமைச்சருக்கு பறந்த கடிதம்
ஆன்லைன் கேமுக்கு அடிமை
ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பயிற்சிகளுக்காக வெங்கடேஷுக்கு அவருடைய தந்தை செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த செல்போனில் தொடக்கத்தில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் தேர்வு சம்பந்தமான குறிப்புகள் உள்ளிட்டவற்றை தீவிரமாக படித்து வந்த வெங்கடேஷ் நாட்கள் செல்ல செல்ல ஸ்மார்ட் போன் கேம்களை விளையாடுவதில் ஆர்வம் காட்டத் தொடங்கி உள்ளார்.
Recommended Video
ரூ.50 ஆயிரம் இழப்பு
நாளடைவில் இந்த ஆர்வம் அதிகமாகவே ஆன்லைனில் பணம் கட்டி கேம்களை விளையாட ஆரம்பித்து இருக்கிறார் அவர். தொடர்ந்து விளையாடியதில் தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் இழந்துள்ளார். ஆன்லைன் கேமுக்கு அடிமையாகிப்போன வெங்கடேஷ் பணம் இல்லாததால் வீட்டிலிருந்த நகையை தனியார் நகை அடகு கடையில் அடகு வைத்து அந்த பணத்தில் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளார். அப்போது கடனாக பெற்ற ரூ.50 ஆயிரம் ரூபாயை வெங்கடேஷ் இழந்துள்ளார்.
தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த வெங்கடேஷ் கடும் மன உளைச்சலில் கடந்த 7ம் தேதி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனை அடுத்து அவரை பெற்றோர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடந்த 5 நாட்களாக வெங்கடேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
தடை நீக்கம்
ஆன்லைன் ரம்மி போன்ற கேம்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்த நிலையில், நீதிமன்றம் அதை ரத்து செய்தது. இதன் காரணமாக மீண்டும் ஏராளமான மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள் அதிகளவில் ஆன்லைன் கேம்கள், சூதாட்டங்களில் ஈடுபட்டு பணத்தை இழந்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொள்வது தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு ஆன்லைன் கேம் மற்றும் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.