ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த கே பி அன்பழகன்?.. லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் அம்பலம்?
தருமபுரி: அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் பங்கு சந்தைகளில் முதலீடு செய்தது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக தெரிகிறது.
அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கே பி அன்பழகன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதியப்பட்டு அவருக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிகள் மூடப்பட்டால் என்ன.. மாணவர்களுக்கு 5 முட்டைகள், உலர் உணவு பொருட்கள் வழங்கப்படும்: தமிழக அரசு
முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ 11.32 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி
தருமபுரி மாவட்டத்திற்கு ரூ 250 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை அறிவிக்க முதல்வர் ஸ்டாலின் அந்த மாவட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் இந்த ரெய்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் கே பி அன்பழகன் பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பங்கு சந்தைகளில் முதலீடு
பாக்கியலட்சுமி தியேட்டர்ஸ், எஸ்எம் ப்ளூ மெட்டல்களில் 50 சதவீதம் பங்குகளை கே பி அன்பழகன் வைத்துள்ளாராம். அது போல் மனைவி, மகன்கள் பெயரில் மருத்துவமனைகள், நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். சரஸ்வதி பழனியப்பன் கல்விக் அறக்கட்டளை ஒன்றையும் கே பி அன்பழகன் நடத்தி வருகிறார்.
தருமபுரியில் கல்குவாரிகள்
மருமகன், உறவினர்களின் பெயரில் தருமபுரியில் கல்குவாரிகளை வாங்கியுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. தெலுங்கானா கிரானைட் குவாரியில் கே பி அன்பழகனுக்கு 80 சதவீதம் பங்குகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து தெலுங்கானாவிலும் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர்கள்
லஞ்ச ஒழிப்புத் துறை முதல் குற்றவாளியாக கே பி அன்பழகன் பெயரையும், 2ஆவது குற்றவாளியாக அவரது மனைவி மல்லிகா பெயரையும் 3ஆவது குற்றவாளியாக அவரது மகன் சசிமோகனையும், 4ஆவது குற்றவாளியாக சந்திரமோகனையும் எஃப்ஐஆரில் சேர்த்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ் பி வேலுமணி, சி விஜயபாஸ்கர், தங்கமணி, கே சி வீரமணி ஆகியோருக்கு அடுத்து 6ஆவது மாஜி அமைச்சர் கே பி அன்பழகன் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.