காரில் கடத்தல்.. கட்டிப் போட்டு பாலியல் பலாத்காரம்! கேரள மாணவிக்கு நேர்ந்த கொடூரம்.. போலீசார் அலர்ட்
திண்டுக்கல் : தேனியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரில் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து திண்டுக்கல் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றதாக புகார் எழுந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தேனி டவுன் மற்றும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இளம்பெண் ஒருவர் உத்தமபாளையம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த இளம் பெண் தேனியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று (23.09.2024) காலை உத்தமபாளையதில் இருந்து தேனிக்கு பேருந்தில் வந்துள்ளார். அப்போது அவரை கருப்பு உடை அணிந்த பெண் ஒருவர் பின்தொடர்ந்து வருவதாக தனது தந்தைக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் மாணவியின் தொலைபேசி எண் சிறிது நேரத்தில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவியின் தந்தை தேனி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு அளித்துள்ளார். இதன் பின்பு தேனி பழைய பேருந்து நிலையம் அருகே வந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மாணவியை காரில் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர், மாணவியை அதே காரில் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் முருகேஸ்வரி மாணவியை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த நிலையில், தேனி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ராமலட்சுமி தலைமையிலான 4 பேர் கொண்ட குழு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை செய்தனர். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையம் காவலர்களும் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் திண்டுக்கல் ஏ.எஸ்.பி சிபின் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று 1 மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை செய்தனர்.
இந்த நிலையில் திடீரென பாதிக்கப்பட்ட மாணவிக்கு வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சை முடிந்த பின்பு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட மாணவி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு எண் 16/24 என்ற அடிப்படையில், இரண்டு பிரிவு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
BNS 70, BNS-87 உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் துறையினர் மற்றும் தேனி டவுன் காவல்துறையினர் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்ற இடங்களில் செல்போன் டவர், சிசிடிவி கேமரா ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி இருந்த இடங்களில் உள்ள செல்போன் டவர்களை வைத்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவி அணிந்திருந்த ஆடைகளை பரிசோதனைக்காக காவல்துறையினர் எடுத்து வந்துள்ளனர். மேலும் தற்போது இரண்டு பிரிவின் கீழ் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேனி டவுன் காவல் நிலையத்திற்கு மாற்றப்படும் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications