அய்யய்யோ.. வார்த்தை தப்பா வந்துருச்சு.. பதறிய திண்டுக்கல் சீனிவாசன்.. பல்லைக் கடித்த மாஜி எம்.எல்.ஏ!
திண்டுக்கல்: அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மீண்டும் ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவோம் என வாய்தவறிக் கூறினார். பின்னர் மேடையில் இருந்தவர்கள் பதறிப்போய் சொல்ல, வாய் தவறி வந்துவிட்டது எனக் கூறி தனது பேச்சை சரி செய்தார் திண்டுக்கல் சீனிவாசன்.
கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் உள்ளிட்ட அத்தியாவசிய காய்கறிகளின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில், தமிழ்நாடு முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் ஜெயக்குமார் தலைமையிலும், விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் தலைமையிலும், திண்டுக்கலில் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுக பொருளாளருமான திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சரும் அதிமுக துணை பொதுச் செயலாளருமான நத்தம் விஸ்வநாதன், முன்னாள் மேயர் மருதராஜ், முன்னாள் எம்.எல்.ஏ, வி.பி.பி.பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஸ்டாலுனுக்கு அரசியல் ஆண்மை இருக்குமானால் மீண்டும் தேர்தல் நடத்தட்டும். 234 தொகுதிகளிலும் டெபாசிட்டை இழக்க வைத்து ஸ்டாலினை நாங்கள் மீண்டும் முதலமைச்சர் ஆக்குவோம் என வாய்தவறிப் பேசினார்.

திண்டுக்கல் சீனிவாசனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த நிர்வாகிகள் அதிர்ந்து போயினர். அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏவுமான வி.பி.பி.பரமசிவம் பல்லைக் கடித்தார். திண்டுக்கல் சீனிவாசனுக்கு அருகில் நின்ற முன்னாள் மேயர் மருதராஜ், திண்டுக்கல் சீனிவாசனை அலெர்ட் செய்தார்.
உடனே சுதாரித்த திண்டுக்கல் சீனிவாசன், "ஐய்யய்யோ.. வார்த்தை தப்பா வந்திருச்சு. ஸ்டாலினை தோற்கடித்து விட்டு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கிக் காட்டுவோம். வார்த்தை வேகத்தில் தவறுதலாக வந்துவிட்டது" எனத் திருத்திப் பேசினார். திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications