திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக 'தலைகள்' மோதல்- கிறுகிறுக்க வைக்கும் உள்ளடி வேலைகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவில் சீனியர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் மோதுவதால் ஒருவருக்கு ஒருவர் குழிபறிக்கும் வேலைகளில் படுதீவிரமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுகவில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகிய பெருந்தலைகள் மோதுகின்றனர். திண்டுக்கல் சீனிவாசனுக்குப் பின் அரசியலுக்கு வந்தவர் நத்தம் விஸ்வநாதன். ஒருகட்டத்தில் சீனிவாசனை விட அதிமுகவில் கோலோச்சினார் நத்தம்.
அதிமுகவின் ஐவர் அணியில் ஒருவராகவும் இருந்தார் நத்தம் விஸ்வநாதன். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக ஜெயலலிதாவின் கோபத்துக்குள்ளாகினார்.
தோற்ற நத்தம் விஸ்வநாதன்
இதனால் திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் தொடர்ச்சியாக வென்று வரும் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஐ. பெரியசாமிக்கு எதிராக நத்தம் விஸ்வநாதனை வேட்பாளராக அறிவித்தார். ஜெயலலிதா எதிர்பார்த்தபடியே நத்தம் விஸ்வநாதன் தோற்றும் போனார். அதன்பின்னர் திண்டுக்கல் அதிமுகவில் சீனிவாசன் கை ஓங்கியது. ஒருகட்டத்தில் நத்தம் விஸ்வநாதனின் ஆதரவாளர்கள் என சொல்ல ஒருவர் கூட இல்லாத நிலை உருவானது.
மீண்டும் வந்த நத்தம் விஸ்வநாதன்
ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது மீண்டும் களத்துக்கு வந்தார் நத்தம் விஸ்வநாதன். ஓபிஎஸ் அணி அதிமுகவில் மீண்டும் இணைந்த நிலையில் நத்தம் விஸ்வநாதனுக்கும் கட்சி பதவி வழங்கப்பட்டது. பின்னர் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரானார் நத்தம். இப்போது நத்தம் தொகுதியில் மீண்டும் நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார்.
திண்டுக்கல் தொகுதிக்கு அமைச்சர் பதவி
கடந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் வெற்றி பெற்ற திண்டுக்கல் சீனிவாசன், வனத்துறை அமைச்சரானார். வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் வென்ற அதிமுக எம்.எல்.ஏ. டாக்டர் வி.பி.பி. பரமசிவம், அக்கட்சியின் மாநில இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளராக உயர்ந்துள்ளார். தற்போதைய நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், டாக்டர் வி.பி.பி. பரமசிவம் ஆகியோர் யார் வென்றாலும் அதிமுக ஆட்சி அமைந்தால் ஒருவருக்கு அமைச்சர் பதவி உறுதி.
ஜரூர் உள்ளடி வேலைகள்
குறிப்பாக திண்டுக்கல் சீனிவாசன் வென்றால் தமக்கு சிக்கல் என்பது நத்தம் விஸ்வநாதன் தரப்பு கருத்து. நத்தம் விஸ்வநாதன் வெற்றி பெற்றால் தமக்கும் தன்னுடைய வாரிசுகளின் எதிர்காலத்துக்கும் இடைஞ்சல் என கருதுகிறது திண்டுக்கல் சீனிவாசன் தரப்ப்பு. இதனால் இரு சீனியர்களும் ஒருவரை ஒருவர் வீழ்த்த பரஸ்பரம் உள்ளடி வேலைகளில் படுதீவிரமாக உள்ளனர்.