அடுத்தடுத்து வழக்குகள்.. தலைமறைவான திண்டுக்கல் கல்லூரி தாளாளரை தூக்க ரெடியாகும் போலீஸ்.. தீவிரம்
திண்டுக்கல்: மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கியுள்ள திண்டுக்கல் சுரபி செவிலியர் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் மீது தாடிக்கொம்பு காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில், சுரபி நர்சிங் கல்லூரி உள்ளது. இதன் தாளாளர் ஜோதி முருகன். இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அம்மா பேரவை மாநில இணைச் செயலாளராகவும் உள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
சென்னைவாசிகள் கவனத்திற்கு.. இன்னும் 3 நாட்களுக்கு கனமழை இருக்காம்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!
சினிமா தயாரிப்பாளராக உள்ள ஜோதிமுருகன், 10 படங்களில் கவுரவ வேடங்களில் நடித்தும் உள்ளார். சுரபி கல்லுாரி தவிர, ராமபிரபா கலைக் கல்லூரி, கவி பாலிடெக்னிக், சுரபி கேட்டரிங் கல்லுாரி என பலகல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை
இந்நிலையில், சுரபி நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவியருக்கு ஜோதிமுருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்தத் தகவல் அறிந்த மாணவர்கள் வெள்ளிக்கிழமை கல்லுாரி வளாகத்தில் வைத்தே ஜோதிமுருகனை அடித்துத் தாக்கினர். விவகாரம் விஸ்வரூபம் எடுத்து மாணவ, மாணவியர் சாலை மறியல் மற்றும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஜோதிமுருகனைக் கைது செய்யும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக அறிவித்தனர்.
விடுதி காப்பாளர் கைது
இதையடுத்து, ஜோதி முருகன் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முக்கிய திருப்பமாக ஜோதிமுருகனுக்கு உடந்தையாக இருந்ததாக விடுதி காப்பாளர் அர்ச்சனாவை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் கல்லுாரி இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
5 தனிப்படைகள் அமைப்பு
விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஜோதிமுருகனை கைது செய்ய திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமாரி உத்தரவின்பேரில், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பொள்ளாச்சி, கோவை, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு ஜோதி முருகனை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதான விடுதி வார்டன் அர்ச்சனா பெங்களூருவை சேர்ந்தவர். இதனால் அவர் மூலம் ஜோதிமுருகன் கர்நாடக மாநிலத்திற்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சரணடைய வாய்ப்பு
அதேநேரத்தில் அவர், ஏதாவது ஒரு கோர்ட்டில் சரண் அடைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஜோதிமுருகன் மட்டும் ஈடுபட்டாரா? அல்லது வேறு முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த விசாரணையில் போலீசார் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர்.
மற்றொரு வழக்கு
இதனிடையே, தலைமறைவாக உள்ளவர் மீது மேலும் ஒரு மாணவி கொடுத்த புகாரின்பேரில் போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மேலும் ஒரு வழக்கை பதிந்துள்ளனர் தாடிக்கொம்பு காவல்துறையினர். அடுத்தடுத்து பிடி இறுகுவதால் முன் ஜாமீன் கிடைப்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதால் சரண்டர் ஆவதை தவிர வேறு வழியில்லாத நிலையில் ஜோதிமுருகன் இருப்பதால், அதற்கு முன் அவரை கைது செய்ய போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.