"என் சாவுக்கு காரணம்..” உருக்கமாக பேசிய வீடியோ.. தூக்கில் தொங்கிய ஜவுளி வியாபாரி - ‘பகீர்’ சம்பவம்!
திண்டுக்கல் : நிலக்கோட்டை அருகே கடன் தொல்லையால் ஜவுளி வியாபாரி தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உருக்கமாகப் பேசி வாட்ஸ்-அப்பில் வீடியோவாக அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பென்ஸ் கார் பலாத்காரம்! வசமாய் சிக்கிய 'புள்ளி’..! 5 பேரில் 3 சின்னப்பசங்க வேற! திடுக்கிட்ட போலீசார்
அந்த வீடியோவில், என் சாவுக்கு முழு காரணம் தனியார் வங்கியின் இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரும் அந்த வங்கிகளும்தான் என உருக்கமாகப் பேசியுள்ளார் லட்சுமணன்.
ஜவுளி வியாபாரி
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே குண்டலபட்டியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (46). வீடு வீடாகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கிகள் வீடு கட்டுவதற்கு குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதாக அறிவிப்பு செய்ததைப் பார்த்து வங்கியில் கடன் வாங்கியுள்ளார். வாங்கியபோது 82 பைசா வட்டி என்று கூறியதாகவும், பின்னர் கூடுதலாக வட்டி கேட்டதாகவும் கூறப்படுகிறது.
கடன் பிரச்சனை
வங்கிக் கடனுக்கு வட்டி கட்டுவதற்காக வெளியிலும் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமணனுக்கும் அவரது மனைவி அழகேஸ்வரிக்கும், இடையே அடிக்கடி கடன் பிரச்சனை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. இதுபோன்ற வாக்குவாதத்தில் நேற்று முன்தினம் அழகேஸ்வரி கோபித்துக் கொண்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார்.
தற்கொலை
இதனால் வேதனையடைந்த லட்சுமணன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். லட்சுமணன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தனது செல்போனில் ஒரு உரையாடலையும் பதிவு செய்து வாட்ஸ்-அப்பில் தனது உறவினர்கள் சிலருக்கு அனுப்பி விட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
வாட்ஸ்-அப் வீடியோ
அந்த வீடியோவில், "என் மரணத்திற்கு காரணம் தனியார் வங்கிகள் தான். என்னை நம்பி 5 பேர் கடன் வாங்கி தந்தனர். அவர்களையும் தர்ம சங்கடத்தில் தலைகுனிய வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். இந்த 5 பேரும் என்னை மன்னிக்கவும். தனியார் வங்கிகள் 6,87,000 ரூபாய் கடன் கொடுத்து 80 பைசா வட்டி என்று கூறினார்கள். ஆனால் தற்போது கூடுதலாக வட்டி வாங்கி வருகிறார்கள். அதை கடந்த 3 வருடமாக கொரானா காலத்தில் கூட சரியாக கட்டி வந்தேன்.
நூல் விலை உயர்வு
தற்போது நூல் விலை மற்றும் ஜவுளி விலைகள் கூடியதால் விலை உயர்வு காரணமாக 10 பேர் வேலை செய்த இடத்தில் 2 பேர்தான் வேலை செய்யும் அளவுக்கு தொழிலில் நஷ்டம் அடைந்துள்ளது. என் சாவுக்கு முழு காரணம் தனியார் வங்கியின் இடைத்தரகராக செயல்பட்ட ஒருவரும் அந்த வங்கிகளும்தான் பொறுப்பு" என உருக்கமாகப் பேசியுள்ளார் லட்சுமணன்.
போலீசார் விசாரணை
லட்சுமணன் அனுப்பிய வீடியோவை பார்த்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் லட்சுமணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.