நாடாளுமன்றத்தில் பாஜக அமைச்சர்கள், எம்பிக்கள் யாருமே "நிதானமாகவே" இல்லை- ஐ.பெரியசாமி அட்டாக்
திண்டுக்கல்: நாடாளுமன்றத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் யாருமே நிதானமாகவே இல்லை; ஒருவேளை ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்களோ என்னவோ? ஏனெனில் பாஜகவின் பலம் வெறும் 240 எம்.பிக்கள் மட்டும்தான் என்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சர் திண்டுக்கல் ஐ.பெரியசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மத்திய அரசுக்கு எதிரான திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது: மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் என் மீது ஒரு குற்றம்சாட்டி உள்ளார். தாம் 2 முறை தமிழ்நாட்டுக்கு வந்ததாகவும் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் தம்முடைய கூட்டத்துக்கே வரவில்லை என கூறியிருக்கிறார்.

மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழ்நாட்டுக்கு வருகை தந்த போது, கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையை முன்னிட்டு அரசு விழா நடைபெற்று வந்தது. அது அரசு நிகழ்ச்சி; அதில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றோம்.
இருந்த போதும் அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது, 100 நாள் வேலைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கூறினேன்; அவரும் நிதியை வழங்குவதாக உறுதியளித்தார்; என்னுடன் தொலைபேசியில் இயல்பாகத்தான் அப்போது பேசினார் சிவராஜ் சிங் சவுகான்.
ஆனால் இதை மறந்துட்டார் போல. சிவராஜ் சிங் சவுகான்.. அவனுங்க பார்லிமெண்ட்டில் யாருமே நிதானமாகவே இல்லை.. எனக்குப் பார்க்க பாஜகவின் மந்திரிகள் (அமைச்சர்கள்), உறுப்பினர்கள் (எம்பிக்கள்) யாருமே நிதானமாக இருப்பதாக தெரியவில்லை நாடாளுமன்றத்தில்.. ஒருவேளை இந்த ஆட்சி கவிழ்ந்துவிடுமோ என்ற பயத்தில் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை..ஏனெனில் பாஜகவுக்கு 240 எம்பிக்கள்தான் இருக்கின்றனர். மத்தியில் பாஜக ஒரு மைனாரிட்டி அரசு. ஆனால் தமிழ்நாட்டில் திமுக மெஜாரிட்டி அரசாங்கம். அதனால் பாஜக ஆட்சி கவிழ்ந்துவிடும் என நினைக்கிறார்கள். அந்த பதற்றம்தான் அதிகமாக இருக்கிறது.
பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.. பீகாரி நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தால் மத்திய அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றால் ஆட்சி கவிழ்ந்தாலும் கவிழ்ந்துவிடுமே.. என்ற பயம் பாஜகவுக்கு இருக்கிறது. அதனால்தான் பாஜகவினர் பதறுகிறார்கள். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
சிவராஜ் சிங் சவுகானுக்கு நீண்ட பதில் தந்த ஐ.பெரியசாமி
முன்னதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு தமது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அளித்த பதில்:
தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்கு வந்த போது தனது கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சமீபத்தில் ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.அவருக்கு சில தகவல்களை தெரிவிக்க வேண்டியது எனது கடமை. இந்தியாவிலேயே ஒன்றிய ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடுதான் சிறப்பாக செயல்படுகிறது.
MGNREGS-கீழ் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு கடந்த செப்டம்பர் முதல் மத்திய அரசினால் வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவைத் தொகை 2,839கோடி ரூபாயை விடுவிக்கக் கோரி தமிழ்நாட்டின் முதலமைச்சர் கடிதம் எழுதியதற்கும்,எங்கள் மாநில நிதியமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நேரில் வலியுறுத்தியதற்கும் பதில் என்ன? இதையெல்லாம் மறைத்து, நாடாளுமன்றத்தில் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்தும்படி ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர்.
அவர் தமிழ்நாடு வந்தபோது,குமரியில் வள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா
அரசு நிகழ்ச்சிக்காகச் சென்றிருந்தேன். ஆனாலும் அவருடன் தொலைபேசியில் உரையாடி, தமிழ்நாட்டின் கோரிக்கைகளை நான் முன்வைத்ததை அவர் ஏனோ மறந்து விட்டது ஆச்சர்யமளிக்கிறது. துறையின் கூடுதல் தலைமை செயலாளர் நேரில் சென்று அவரை சந்தித்துப் பேசியதையும் கூட அறிவார். இது தவிர, காணொலி வாயிலான ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வுக்கூட்டங்களிலும் நான் அவருடன் கலந்துகொண்டுள்ளேன். இருப்பினும் தமிழ்நாட்டுக்குரிய நிதியை விடுவிப்பதைப் பற்றி வாய்திறக்காமல், திட்டமிட்டு நான் ஏதோ சொந்தப்பணிக்காகத் துறை ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதைப் போல பேசியுள்ளது அவர் வகிக்கும் பதவிக்கு உகந்ததல்ல!
இந்த கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் சுட்டெரிக்கும் வெயிலில் தங்களது உடல் உழைப்பை தந்து விட்டு ஊதியத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் சம்பள பாக்கியை வழங்குவதில் இதே ஆர்வத்தை அவர் காட்டியிருந்தால் நாம் பாராட்டியிருப்போம். இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications