ஒரு பீருக்காக போரா...? அக்கப்போர் செய்த அந்த 5 பேர்...!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஒரே ஒரு பீரை வங்கி அதை பங்கிட்டுக் கொள்வதில் ஏற்பட்ட தகராறில் 5 வடமாநில இளைஞர்கள் சாலையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட வீடியோ சமுக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் முப்பதுக்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகிறது. இந்த நூற்பாலைகளில் அதிகப்படியாக வடமாநில இளைஞர்களே வேலை பார்த்து வருகின்றனர். வட மாநிலத்தை விட தமிழகத்தில் வேலை வாய்ப்பு அதிகமாக உள்ளதாகவும் சம்பளம் அதிகமாக கிடைப்பதால் இங்குள்ள நூற்பாலைகளில் வடமாநில இளைஞர்கள் அதிக அளவில் வேலைக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு பணிபுரியும் இளைஞர்களுக்கு வார அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. சம்பளம் வாங்கிக் கொண்டு சில வடமாநில இளைஞர்கள் விடுமுறை நாட்களில் வேடசந்தூர் பகுதியில் உள்ள மதுபான கடைகளில் மதுபானம் வாங்கிக் கொண்டு அங்கேயே மதுபானங்களை அருந்தி விட்டு பின்பு வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் அவ்வப்போது ரகளையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது

வடமாநில தொழிலாளர்கள்
இந்நிலையில் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் சாலையில் சிதம்பரம் நால்ரோடு என்ற இடத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில இளைஞர்கள் 5 பேர் வேடசந்தூரில் ஒரு அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்குவதற்கு சென்றுள்ளனர்.

பீரை பங்கு பிரிப்பதில் தகராறு
அங்கு ஒரு பீரை வாங்கிக்கொண்டு சைடிஷிற்கு அருகில் இருந்த ஒரு பெட்டிக் கடையில் நெல்லிக்காய் ஊறுகாய் வாங்கியுள்ளனர். பணம் அனைத்தும் தீர்ந்த நிலையில் அந்த ஐந்து இளைஞர்களும் ஒரு பீரை பங்கிட்டு கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதில் ஒருவர் அதிகமாக குடித்து விட மற்ற நான்கு பேருக்கும் பீரின் அளவு கம்மியாக இருந்ததால் கோபமடைந்த நான்கு பேர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு மீதமிருந்த பீரை பிடுங்க முயன்றனர்.

சாலையில் அடிதடி
அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் சாலையில் மாறி மாறி திட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இதனால் வேடசந்தூர் ஆத்துமேடு பேருந்து நிறுத்தத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

ஓட்டம் பிடித்த இளைஞர்கள்
அதன் பின் பேருந்து நிறுத்தம் முன்பு கூட்டம் அதிகமாக கூடியதால் அங்கு இருந்த நான்கு வடமாநில இளைஞர்கள் கூட்டத்தைக் கண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். வடமாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் வடமாநில இளைஞர்களில் சிலர் மது போதைக்கு அடிமையாகி இதுபோன்ற அடிதடி சம்பவத்தில் ஈடுபடுவதால் அப்பகுதியில் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications