தீபாவளி பரிசு காத்திருக்கிறது.. காலையில் கதவை தட்டிய கவுன்சிலர்! மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
திண்டுக்கல் : தீபாவளிப் பண்டிகை இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் கட்சி தொடங்கி எதிர்கட்சி வரை நிர்வாகிகளை 'வெயிட்டாக' கவனித்து வரும் நிலையில், திண்டுக்கல்லில் சுயேட்சையாக போட்டியிட்டு திமுகவில் ஐக்கியமான தமிழகத்தின் இளம் வயது கவுன்சிலரான வெங்கடேஷ் வாக்காளர்களுக்கு பாத்திரம், ஸ்வீட் "ஸ்பெசல்' கவனிப்பு செய்திருக்கிறார்.
கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 35 வார்டுகளில் தனி பெரும்பான்மையாக திமுக கவுன்சிலர்கள் வெற்றி பெற்றதன் மூலம் திண்டுக்கல் மாநகராட்சியின் மேயராக இளமதியும், துணை மேயராக ராஜப்பாவும் இருந்து வருகிறார்கள்.
48 வார்டுகள் கொண்ட திண்டுக்கல் மாநகராட்சியில் யாரும் எதிர்பாராத வகையில் திண்டுக்கல்லில் மெகா கோடீஸ்வரரான லயன் ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் என்பவரும் சுயேச்சையாக களத்தில் இறங்கி அரசியல் கட்சிகளுக்கு இணையாக வாக்கு சேகரித்தார்.

கோடீஸ்வர கவுன்சிலர்
தண்ணீர் குழாய் சின்னத்தில் போட்டியிட்ட வெங்கடேஷ் கோடீஸ்வர குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும் குப்பைகளை சுத்தம் செய்வது, சாக்கடை அள்ளுவது, வாக்காளர்களின் காலில் விழுவது என அரசியல் கட்சியினருக்கு டாஃப் கொடுத்து வாக்கு சேகரித்தார். அவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் குப்புசாமி என்பவர் போட்டியிட்டார்.

திமுகவில் ஐக்கியம்
அதே வார்டில் அதிமுக உள்ளிட்ட பெரிய கட்சி வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கிய நிலையில் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வெங்கடேஷ் சுயேச்சையாக வெற்றி பெற்றார். பின்னர் பிப்ரவரி இறுதியில் திமுகவில் ஐ.பெரியசாமி முன்னிலையில் இணைந்தார் வெங்கடேஷ். அதைதொடர்ந்து கட்சிப் பணியாற்றி வந்ததன் மூலம் வெங்கடேஷ்க்கு வார்டு செயலாளர் பதவியை கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில் குமார் கொடுத்தார் .

தீபாவளிப் பரிசு
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகை இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் ஆளும் கட்சி தொடங்கி எதிர்கட்சி வரை நிர்வாகிகளை 'வெயிட்டாக' கவனித்து வருகின்றனர். இதனையடுத்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென திட்டமிட்ட வெங்கடேஷ் ஒரு லாரி நிறைய பொருட்களை இறக்குமதி செய்திருக்கிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற வைத்த வார்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு சில்வர் பாத்திரத்தில் தீபாவளிக்காக வார்டுகளில் உள்ள மக்களுக்கு அதிரசம், முறுக்கு, காரசேவ், பாசிப்பயறு உருண்டை ஆகியவற்றை வைத்துள்ளார்.

கவனிப்பு
பின்னர் அதிகாலை முதலே வீடு வீடாகச் சென்று இந்த பொருட்களைக் கொடுத்து அவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்தார். வார்டு மக்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துனர். மேலும் அந்த பாத்திரத்தில் "முக்கிய ஸ்வீட்டும்' இருந்திருக்கிறது. தற்போது இந்த தகவல் மாநகராட்சி முழுவதும் பரவியிருக்கும் நிலையில், மற்ற வார்டு கவுன்சிலர்களை மக்கள் கேட்கக் துவங்கியிருக்கினராம்.












Click it and Unblock the Notifications