பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் மகா சண்டி யாகம்..அமைச்சர் எல்.முருகன் ரகசியமாக பங்கேற்றது ஏன்?
திண்டுக்கல்: பழனி கோவிலுக்கு வருகைதந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் புலிப்பாணி ஆதின ஆசிரமத்தில் நடைபெற்ற மகா சண்டி யாகத்தில் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் எல்.முருகன் எதற்காக இந்த மகா சண்டி யாகம் நடத்தினார் என்பது பலரது கேள்வியாக உள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போகர் சித்தரின் ஜீவ சமாதி உள்ளது. அவரது தீவிர சீடரான புலிப்பாணிக்கு மலை அடிவாரத்தில் ஜீவ சமாதி உள்ளது. குருநாதரின் மீது அளவிடமுடியாத பாசம் கொண்டவர் புலிப்பாணி. குருவிற்கே அஷ்டமா சித்திகளை போதித்தவர் புலிப்பாணி.
மக்களின் நலன் காக்க நோய்களில் இருந்து நிவாரணம் தரும் நவபாஷாண முருகன் சிலையை வடித்தவர் போகர். தான் வடித்த நவபாஷாண விக்ரகத்திற்கு தண்டாயுதபாணி என்றும் பெயர் சூட்டினார் போகர்.
100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசு ஆகும்! மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மிகத் திட்டவட்டம்!
போகர், புலிப்பாணி ஜீவ சமாதிகள்
பழனியில் போகர் ஜீவ சமாதி அடைந்த பின்னரும் புலிப்பாணி சித்தர் அவரது பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். அவரது ஜீவ சமாதியும் மலையடிவாரத்திலேயே அமைக்கப்பட்டது. இன்றைக்கும் புலிப்பாணி வம்சத்தினர்தான் பூஜைகளை செய்து வருகின்றனர். இந்த ஜீவ சமாதியைப் பற்றி அறிந்தவர்கள் புலிப்பாணி சித்தரை வழிபட்டு செல்கின்றனர்.
மத்திய அமைச்சர் எல்.முருகன்
பழனி கோவிலுக்கு வந்த மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து புலிப்பாணி ஆதின ஆசிரமத்தில் நடைபெற்ற யாகத்தில் கலந்துகொண்டார். இரு தினங்களாக நடைபெற்று வரும் யாகத்தில் கலந்து கொண்டார்.
மகா சண்டி யாகம்
புலிப்பாணி ஆசிரமத்தில் மத்திய இணை அமைச்சர் முருகன் மற்றும் பாஜகவினர் சிலரை தவிர பொதுமக்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து ஆதின நிர்வாகத்தினரிடம் கேட்ட போது, மகா சண்டியாகம் நடத்தப்படுவதாகவும், இதில் அமைச்சர் முருகன் மற்றும் சில பாஜகவினர் தவிர யாரையும் அனுமதிக்கவில்லை என்றும், மேலும் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கவில்லை என்றும் கூறினர். அதே நேரத்தில் யாகத்தில் பங்கேற்க மட்டுமே தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
யாகத்தில் பங்கேற்றது ஏன்?
பழனி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள், பழனி அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று வழிபடுவது வழக்கம்.இந்நிலையில் திடீரென முன்னறிவிப்பின்றி இரண்டு நாட்களுக்கு மகா சண்டியாகம் நடத்தப்படுவதும், அதில் மத்திய இணை அமைச்சர் ரகசியமாக பங்கேற்பதும், பொதுமக்களுக்கு அனுமதி மறுத்திருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
பாஜகவினர் விமர்சனம்
சில மாதங்களுக்கு முன்பு முதல்வரின் குடும்பத்தினர் திருச்செந்தூரில் பொதுமக்களை அனுமதிக்காமல் யாகம் நடத்தியதாக குற்றம்சாட்டு எழுந்து அதை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில், தற்போது பாஜகவை சேர்ந்த மத்திய இணை அமைச்சர் ஒருவர் பொதுமக்கள் அதிகம் வந்து வழிபடும் புலிப்பாணி ஆதின ஆசிரமத்தில் ரகசிய யாகம் நடத்தி, அதில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது மட்டும் சரியா என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மகா சண்டி ஹோமம் ஏன்?
மகா சண்டி ஹோமம் எல்லோராலும் செய்து விட முடியாது. தீராத பலி, குலதெய்வ சாபம், பித்ருசாபங்கள், தடைகள் நீங்கவே மகா சண்டி ஹோமம் நடத்துகின்றனர். மகா சண்டி ஹோமம் செய்தால் அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கும், பூரண ஆரோக்கியம் நிறைவான வாழ்க்கையும் முக்தியும் கிடைக்கும் என மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் எல்.முருகன் எதற்காக இந்த மகா சண்டி யாகம் நடத்தினார் என்பது பலரது கேள்வியாக உள்ளது.