முழங்காலை மடக்கி முட்டி போட்டு நின்ற இந்திய அணி வீரர்கள்.. எழும் விமர்சனங்கள்.. என்ன காரணம்?
துபாய்: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடங்கும் முன்பாக, இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஒரு காலை மடக்கி முழங்காலிட்டு கையை நெஞ்சில் வைத்து நின்றதை ரசிகர்கள் பார்த்திருப்பீர்கள்.
Recommended Video
இதற்கு முன்பு ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதியபோதே ரசிகர்கள் அதை பார்த்திருப்பார்கள். ஆனால் பலரும் அப்படியே கடந்தும் போய் விட்டார்கள்.
இருப்பினும் இது கடந்து செல்லும் விஷயம் இல்லை. இதன் பின்னணி ரொம்பவே உருக்கமானது.

பாகுபலி பாணியில்
ஒரு காலை மடக்கி முட்டி போட்டு, கையை நெஞ்சின்மீது வைத்துக் கொண்டு உறுதி ஏற்கிறார்கள் வீரர்கள். பாகுபலி படத்தில் தமன்னா, சத்யராஜ் கதாப்பாத்திரங்கள் செய்வதை போலதான் இதுவும். இந்த உறுதி கருப்பின மக்களுக்காக. ஆம்.. Black lives matter (BLM) என்பதுதான் இதன் அர்த்தம்.

அமெரிக்க ஜார்ஜ் பிளாயிடு சம்பவம்
ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாயிடு கடந்த மே மாதம், அமெரிக்க வெள்ளை இன காவல் துறை அதிகாரியால் காலுக்கு அடியில் வைத்து அழுத்தி கொலை செய்யப்பட்டார். அப்போது முதல் கறுப்பினத்தவர்கள் வாழ்வது முக்கியம் என்ற கோஷம் உலகம் முழுக்க எழுந்தது.

கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு
பல்வேறு பிரபலங்களும் இந்த விஷயத்தில் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தனர். இதன் ஒரு பகுதியாகத்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவும், முட்டிக்கு கீழே வைத்து கறுப்பின நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு கூறும் வகையிலும் முழங்காலை மடக்கி நிறுத்தி, நெஞ்சில் கைவைத்து வீரர்கள் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இவ்வாறு முழங்காலிட்டு கையை நெஞ்சின் மீது வைத்து உறுதிமொழி ஏற்றனர்.

விமர்சனங்கள்
அதே நேரம் சில நெட்டிசன்கள் இவ்வாறு உறுதி மொழி எடுத்ததை விமர்சனம் செய்து கூட சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிறார்கள். நமக்கு தொடர்பில்லாத விஷயத்தில் ஏன் இந்தியா இணைய வேண்டும், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக இப்படி செய்ய வேண்டியதுதானே என்றெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் கூறுவதை பார்க்க முடிகிறது. இனப்பாகுபாடு என்பதையெல்லாம் தாண்டி அடக்குமுறைக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் மனிதாபிமானம் ஆகிய இரண்டும் தான் இந்த விஷயத்தில் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வைத்துள்ளதே தவிர, இதில் மரியாதை குறைவு எதுவும் கிடையாது என்று பதிலுக்கு சில நெட்டிசன்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications