'ரன் மெஷின்'.. கிறிஸ்கெய்லின் 6 வருட சாதனையை அசால்டாக முறியடித்த பாகிஸ்தான் வீரர்.. செம பேட்டிங்!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா மூட்டை முடிச்சுகளை கட்டி கிளம்ப தயாராகி விட்டது. இந்த தொடரில் இந்தியா வெளியேற முதல் படி அமைத்து கொடுத்த பாகிஸ்தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று கம்பீரமாக நிற்கிறது.
நேற்று இரவு தனது கடைசி லீக் போட்டியில் ஸ்காட்லாந்தை சந்தித்தது பாகிஸ்தான். டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. எதிர்பார்த்தபடியே ஸ்காட்லாந்து பவுலர்கள் பந்தை பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடித்து துவம்சம் செய்தனர்.

பாகிஸ்தான் அபார வெற்றி
20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தனர். கேப்டன் பாபர் அசாம் 47 பந்துகளில் 66 ரன் கள் எடுத்தார். மூத்த வீரரான சோயிப் மாலிக் வெறும் 18 பந்துகளில் 6 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார். பின்பு வழக்கம்போல் பாகிஸ்தானின் அசுர பந்துவீச்சுக்கு அடிபணிந்த ஸ்காட்லாந்து வீரர்கள் 117 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் பாகிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ரன் மெஷின் முகமது ரிஸ்வான்
இந்த போட்டியில் பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 15 ரன் எடுத்து அவுட்டானார். முன்னதாக அவர் 5-வது ரன்னை எடுத்தபோது வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லின் சாதனையை ஒரு முறியடித்தார். அதாவது 20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனைக்கு முகமது ரிஸ்வான் சொந்தக்காரர் ஆனார்.

கிறிஸ் கெய்ல் சாதனை முறியடிப்பு
கிறிஸ் கெய்ல் 2015-ம் ஆண்டு 36 ஆட்டத்தில் விளையாடி 1,665 ரன் எடுத்தார். சராசரி 59.46 ஆகும். இதில் 3 சதமும், 10 அரைசதமும் நொறுக்கினார். அதிகபட்சமாக 151 ரன் குவித்தார். கிறிஸ்கெய்லின் இந்த 6 ஆண்டு கால சாதனையைதான் முகமது ரிஸ்வான் தற்போது முறியடித்துள்ளார். முகமது ரிஸ்வான் இந்த ஆண்டில் 1,676 எடுத்துள்ளார். அதாவது கிறிஸ் கெய்ல் எடுத்த ரன்னை தாண்டி விட்டார்.

இந்தியாவை கலங்கடித்தவர்
இந்த ஆண்டில் 1 சதமும், 15 அரை சதமும் நொறுக்கியுள்ள முகமது ரிஸ்வான் அதிகபட்சமாக 104 ரன்கள் குவித்தார். இந்தியாவுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய முகமது ரிஸ்வான் 79 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications