பாஜக பிரமுகர் பேச்சால் வந்த வினை.. அரபு நாடுகளில் கடைகளில் இருந்த இந்திய பொருட்கள் அகற்றம்
சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற நாடுகளில் கடைகளில் இருந்து இந்திய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
துபாய்: நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்தை கண்டித்த வளைகுடா நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியுள்ளன. சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற நாடுகளில் கடைகளில் இருந்து இந்திய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.
முகமது நபிக்கு எதிராக பாஜக தலைவர்கள் நூபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கூறியுள்ள சர்ச்சைக்குரிய கருத்து அரபு நாடுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, முகமது நபிக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அதிகாரப்பூர்வ எதிர்ப்பு தெரிவித்து அறிக்கைகள் வெளியிட்டன.
அதிர்ச்சி! பூட்டிய காரில் சிக்கிய 3 குழந்தைகள் பலி! மூச்சுத் திணறி பலியான சோகம்..! பெற்றோர்களே கவனம்
சர்ச்சைக்குரிய கருத்துக்கள் இந்த மூன்று நாடுகளிலும், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளிலும் ஆட்சேபனைக்கு வழிவகுத்தன.
அரபு நாடுகளுக்கு இந்தியா பதில்
இந்த சர்ச்சை விவகாரத்தில் அரபு நாடுளுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. அரபு நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து, பாஜக நுபுர் சர்மா மற்றும்நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தது. பாஜக செய்தித் தொடர்பாளர்கள் பொறுப்பில் இருந்து நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் நீக்கப்பட்டனர். இந்த நிலையில், பாஜக செய்தித் தொடர்பாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட அறிவிப்பை ஆசியாவிற்கான குவைத்தின் துணை வெளியுறவு மந்திரி வரவேற்றுள்ளார்.
கத்தார் வலியுறுத்தல்
கத்தாரின் வெளியுறவு அமைச்சகம், இந்திய தூதர் தீபக் மிட்டலை வரவழைத்து, 'முகமது நபிக்கு எதிரான பாஜக தலைவரின் கருத்துக்களை முற்றிலும் நிராகரிப்பதாக எதிர்ப்பு தெரிவித்து' அதிகாரப்பூர்வ அறிக்கையை கொடுத்தது. இந்திய அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கத்தார் நாடு வலியுறுத்தியுள்ளது. இதுதொடா்பாக கத்தாா் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய தூதா் தீபக் மிட்டல் விளக்கமளித்தபோது, அந்தப் பதிவுகள் இந்தியாவின் கருத்துகள் அல்ல என்று தெரிவித்தாா். அந்தக் கருத்துகள் விஷம சக்திகளின் கருத்துகள் என்றும் அவா் கூறியுள்ளார்.
Recommended Video
இந்திய தூதர் வருத்தம்
இந்த சர்ச்சைக்குரிய விவகாரத்தில் ஈரான் அரசின் கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு, ஈரானுக்கான இந்திய தூதர் நேற்று மாலை வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு ஈரானுக்கான இந்திய தூதர் வருத்தம் தெரிவித்ததோடு, இஸ்லாத்தின் நபிகள் மீதான எந்த விதமான அவமானத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறினார். இத்தகைய சர்ச்சை கருத்துக்கள் எந்த வகையிலும் இந்திய அரசின் கருத்துக்களை பிரதிபலிக்கவில்லை. இவை தனிப்பட்ட உறுப்பினர்களின் பார்வையே ஆகும் என்று தெரிவித்தார்.
புண்படுத்தும் கருத்துக்கள்
உலகம் முழுவதும் வாழும் 200 கோடிக்கும் அதிகமான இஸ்லாமியர்களை புண்படுத்தும் வகையில் பாஜக நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்காக இந்திய அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என்று குவைத் அரசு வலியுறுத்தி உள்ளது. நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி பேசுவது மத சுதந்திரத்தை மீறும் செயல் என்று ரஷ்ய அதிபர் புதினும் கண்டித்துள்ளார்.
ட்விட்டரில் கொந்தளிப்பு
இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஓமன் நாட்டின் கிராண்ட் முப்தி ஷேக் அல் கலீலி இதனை சுட்டிக்காட்டி பிரதமர் நரேந்திர மோடி மீதும் பாஜக மீதும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.
இந்திய பொருட்கள் புறக்கணிப்பு
இந்த நிலையில் நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் விமர்சனத்தை கண்டித்த வளைகுடா நாடுகள், இந்திய பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்குரல் உயர்த்தியுள்ளன. சவூதி அரேபியா, பக்ரைன், குவைத் போன்ற நாடுகளில் கடைகளில் இருந்து இந்திய பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. சில கடைகளில் இந்திய பொருட்களை தடை செய்யப்பட்ட பொருட்கள் என்று ஸ்டிக்கர் ஒட்டி மூடிவைத்துள்ளன.