திமுகவுக்கு புதிய நெருக்கடி! இலங்கை ஜனாதிபதி ரணிலை மே.வ. மாநாட்டுக்கு அழைத்த மமதா பானர்ஜி!

Subscribe to Oneindia Tamil

துபாய்: வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க மாநில அரசு நடத்தும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் பங்கேற்க வேண்டும் என மமதா பானர்ஜி அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பெருமளவு நிதி உதவியை மத்திய அரசு வழங்கியது. தமிழ்நாடு அரசும் இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. ஆனாலும் சிங்கள தலைவர்கள், தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சிங்கள தலைவர்கள் நுழைவதற்கு கடும் எதிர்ப்பு நீடிப்பதால் அவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

 West Bengal CM Mamata Banerjee meets Sri Lanka President Ranil Wickremesinghe at Dubai airport

டெல்லியில் ரணில்: அண்மையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை தந்திருந்தார். பிரதமர் மோடி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அப்போது தொழிலதிபர் அதானியும் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

வெளிநாட்டு பயணத்தில் மமதா: இந்நிலையில் துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பயணம் மேற்கொண்டுள்ளார். மமதா பானர்ஜி மொத்தம் 12 நாட்கள் இந்த வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போதுதான் துபாய் விமான நிலையத்தில் திடீர்னெ ரணில் விக்கிரமசிங்கேவை மமதா பானர்ஜி சந்தித்து பேசினார்.

துபாயில் ரணில்- மமதா சந்திப்பு: இது தொடர்பாக மமதா பானர்ஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவில், துபாய் சர்வதேச விமான நிலைய காத்திருப்பு பகுதியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே என்னை பார்த்தார். தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பும் விடுத்தார். அப்போது வரும் நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்க ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அழைப்பு விடுத்தேன் என கூறியுள்ளார் மமதா பானர்ஜி. மேலும் தம்மை இலங்கைக்கு வருகை தர வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்ததாகவும் மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.

மமதாவின் திரிணாமுல் vs திமுக: தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் "இந்தியா" கூட்டணியில் முதன்மையான கட்சிகளாக உள்ளன. லோக்சபா எம்.பி.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் காங்கிரஸுக்கு அடுத்ததாக திமுக, அதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் வலிமையான கட்சிகள். இருந்த போதும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக முன்னிறுத்துவதை மமதா பானர்ஜி நீண்டகாலமாக ரசிக்கவில்லை. அண்மையில் கூட சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற பிரச்சனையில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான கருத்துகளை கூறி மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்திருந்தார்.

திமுகவுக்கு உருவாகப் போகும் நெருக்கடி?: தற்போது தமிழ்நாட்டு மக்களும் திமுகவும் தொடர்ந்து எதிர்த்து வரும் இலங்கை அரசுடன் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்திருக்கிறார். இதனால் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் தலைவர்கள், மமதா- இலங்கையின் நெருக்கம் குறித்த திமுகவின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுப்பி நெருக்கடி தரக் கூடிய சூழ்நிலை உருவாகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+