காவிரி மேலாண்மை வாரியம்- தமிழகத்தின் முதுகில் குத்தியது மத்திய பாஜக அரசு- தலையங்கம்
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கப் போவதில்லை என மத்திய அரசு கைவிரித்துள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கான நீர் அளவைக் குறைத்தது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து எந்த உத்தரவும் இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ள நீர் அளவைத் திறந்துவிடுவதை செயல்படுத்த ஒரு திட்டத்தை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்று மட்டுமே அந்த தீர்ப்பு கூறுவதாக இருக்கிறது என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்றுதான் அத்தீர்ப்பு கூறுவதாக வியாக்கியானங்கள் கற்பிக்கப்பட்டன.

இதனடிப்படையில்தான் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும்.. 6 வார கால அவகாசம் இருக்கிறது என்றெல்லாம் சப்பைக்கட்டுகள் கட்டப்பட்டன. இதற்காகவே டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் என்றெல்லாம் கூறப்பட்டது.
ஆனால் இன்று பூனைக்குட்டி வெளியே வந்த கதையாக காவிரி மேலாண்மை வாரியத்துக்கு சமாதி கட்டிவிட்டது மத்திய பாஜக அரசு. இன்றைய டெல்லி கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மத்திய அரசோ, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அப்படிச் சொல்லவில்லை. தீர்ப்பை செயல்படுத்துவதற்கான குழுவைத்தான் 6 வார காலத்துக்குள் அமைக்க வேண்டு என கூறியிருக்கிறது என கை விரித்திருக்கிறது. இது காவிரி உரிமையை பறிகொடுத்துவிட்டு நிற்கும் தமிழக விவசாயிகளுக்கு பேரிடிதான்.
நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, நடுவர் மன்ற தீர்ப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பு என அனைத்திலுமே தமிழகத்தின் காவிரி உரிமை காவு கொள்ளப்பட்டது. இப்போது தமிழகத்துக்கு காவிரி நதிநீரே தமிழகத்துக்கு கிடைக்காது என்கிற வகையில் மத்திய அரசு தமிழகத்தில் முதுகில் குத்தியிருக்கிறது.
தமிழகத்தில் காலூன்றவே முடியாது என்பதால்தான் இத்தகைய வஞ்சகத்தை பாஜக அரசு செய்துள்ளது. கர்நாடகா தேர்தல் அரசியலுக்காக ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக காவிரியில் தமிழகம் அனுபவித்து வரும் உரிமைக்கு வேட்டு வைக்கப்பட்டிருப்பது மிகப் பெரும் பச்சை துரோகம்.












Click it and Unblock the Notifications